தென்சீனா கடற்பரப்பில் அமெரிக்கா- இந்தியா கூட்டு ரோந்து?
டெல்லி: சர்ச்சைக்குரிய தென் சீனா கடற்பரப்பில் அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டு ரோந்து மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையால் சீனா கடும் ஆத்திரமடைந்துள்ளது.
தென் சீனா கடற்பரப்பு முழுவதையும் தமக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா. ஆனால் வியட்நாம், புருனே உள்ளிட்ட நாடுகளும் தென் சீனா கடற்பரப்புக்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
இதனால் தென் சீனா கடற்பரப்பில் 2 செயற்கையான தீவுகளை உருவாக்கி அங்கே ராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளது சீனா. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்தியாவின் தென் சீனா கடற்பரப்பு முழுவதும் சீனாவுக்கே சொந்தமானது என்ற நிலைப்பாட்டை கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் அவ்வப்போது ஈடுபடடுகின்றன.
இந்நிலையில் ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து தென்சீனா கடற்பரப்பில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்கா விரும்புகிறது. இந்திய பெருங்கடலில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியை கடந்த ஆண்டு நடத்தியிருந்தது.
இதேபோல் தென்சீனா கடற்பரப்பிலும் கூட்டு ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்தி வருகிறது.
ஆனால் இந்திய அதிகாரிகளோ, ஐநாவின் கீழான சர்வதேச ராணுவத்தில் மட்டுமே இணைந்து செயல்படுவது என்ற நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனக் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்தியாவை ஒப்புக் கொள்ள வைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் இந்நடவடிக்கை சீனாவை கடும் ஆத்திரமடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.