டெல்லி வந்தார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே.. மோடியுடன் இன்று பேச்சு!
இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசா மே, 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளார்.
டெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசா மே, 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரதமரான பிறகு, ஐரோப்பா கண்டத்துக்கு வெளியே உள்ள ஒரு நாட்டுக்கு இரு தரப்பு பயணமாக தெரசா செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
டெல்லி விமானம் நிலையம் வந்து சேர்ந்த தெரசாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இங்கிலாந்து தொழில் அதிபர்கள் சுமார் 40 பேரும் இந்தியா வந்தனர்.
இந்தியா வந்ததும் முதல் நிகழ்ச்சியாக, இன்று காலை டெல்லியில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தெரசா மே தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல், டெல்லியில் மோடியைச் சந்திக்கும் தெரசா மே, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
விசா விதிமுறைகளை இங்கிலாந்து கடுமையாக்கி இருப்பதால், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த சந்திப்பின் போது தெரசா மேயிடம் இப்பிரச்சினை குறித்து மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டு அறிக்கை வெளியிடுவார்கள்.
முன்னதாக தனது இந்தியப் பயணம் குறித்து இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு தெரசா அளித்துள்ள பேட்டியில், "இந்தியா, நமது முக்கியமான, நட்பு நாடுகளில் ஒன்று. அது, உலகின் முன்னணி வல்லரசு நாடு. அதனுடன் நாம் கலாச்சார, சரித்திரபூர்வமான உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். நீண்ட கால பலன் அளிக்கக்கூடிய சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தலைமையில் இந்தியா செய்து வருகிறது.
இரு நாடுகளும் வலிமையான, முதிர்ச்சியான உறவை கொண்டிருப்பதுடன், அதை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆகவே, நான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன்.
இங்கிலாந்தின் நலனுக்கு ஏற்ற காரியங்களை நாம் முன்னெடுத்து செல்வோம். வர்த்தகத்துக்கு நாம் தயாராக இருப்பதை எடுத்து சொல்வோம். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வலியுறுத்துவோம்.
இந்தியாவில் 'ஸ்மார்ட் சிட்டி', 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால், அதன் இலக்கை எட்ட இங்கிலாந்து உதவ முடியும். அதே சமயத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பணி முடிந்த பிறகே, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.