கர்நாடக தாய் உமா பாரதியிடம் காவிரிக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? தமிழக விவசாயிகளின் பரிதாப நிலை
டெல்லி: உமா பாரதி முன்னிலையில், காவிரி தொடர்பாக நாளை இரு மாநில முதல்வர்கள் நடுவேயான பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதில் நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என்பது தமிழக விவசாயிகள் கருத்தாக உள்ளது.
காவிரி பங்கீடு தொடர்பாக, நேற்று உச்சநீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக-கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்ய முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பேச்சுவார்த்தைக்கு 2 நாட்களில் ஏற்பாடு செய்வதாக மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் உறுதியளித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரும்படி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நாளை பேச்சுவார்த்தை
டெல்லியிலுள்ள ஷ்ராம் சக்தி பவனில் இருமாநில முதல்வர்களுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். நீர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை செயலாளர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட் மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் பெற்றுத்தர தமிழக அரசு ஏற்பாடுகளை செய்துவந்தது. இதனால் கர்நாடகாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுவந்தது. எனவேதான் அந்த மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்தன. எனவே பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்க்கலாம் என கர்நாடக அரசும் அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பேச ஆரம்பித்தனர்.
பேச்சுவார்த்ததையால் பலன் என்ன
பேச்சுவார்த்தை என்பது கர்நாடகாவுக்கு நலன்பயக்குமே தவிர, தமிழகத்துக்கு அதனால் பலன் இல்லை என்பதால் மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் விலகியே இருந்தது தமிழக அரசு. ஆனால், கர்நாடக எம்.பிக்களோ, மத்திய அமைச்சர் உமா பாரதிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். உமா பாரதியை மத்திய அமைச்சர் சதானந்தகவுடா நேரில் சந்தித்து ஆலோசித்து வந்தார். மறுநாளே முதல்வர் சித்தராமையா மற்றும் மூத்த அமைச்சர்கள் உமா பாரதியை டெல்லியில் சந்தித்து பேசினர்.
கர்நாடக தாய்
உமா பாரதி, கர்நாடகாவின் பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகளால் சன்னியாசம் பெறப்பட்டவர். எனவே அம்மாநிலம் மீது பாசம் அதிகம். கர்நாடக அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர், இவரை கர்நாடக தாய் என்றே பாசமாக அழைக்கிறார்கள். மேகதாது பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்களில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பகிரங்கமாக கருத்து கூறியவர் உமா பாரதி. கர்நாடகா அதன் எல்லையில் அணை கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியாது என்று பகிரங்கமாக கூறியவர்தான் இந்த உமா பாரதி. அவரது முன்னிலையில் கூட்டம் நடைபெறுவது தமிழகத்துக்கு பின்னடைவாகவே அமையும் என்று தெரிகிறது.
கவுரவ பிரச்சினை
தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத்தான், உச்சநீதிமன்றம் வாயிலாக பெற நினைக்கிறது தமிழகம். இதில் பேச்சுவார்த்தைக்கு என்ன அவசியம் உள்ளது என்பதுதான் புரியாத புதிர். காவிரி நதிநீர் விஷயத்தில் கர்நாடகா இறங்கிவந்தால் அந்த மாநில மக்களின் கோபத்திற்கும், தமிழகம் இறங்கிவந்தால் இம்மாநில மக்களின் கோபத்துக்கும் அந்தந்த மாநில அரசுகள் ஆட்பட நேரிடும். ஏனெனில் காவிரி பிரச்சினை என்பது கவுரவ பிரச்சினையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே பேச்சுவார்த்தையில் யார் நியாயம் பேசினாலும் எடுபடப்போவதில்லை. மனசாட்சிக்கு விரோதமாகவே கர்நாடகா முடிவெடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
மேலாண்மை வாரியமே தீர்வு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், சுப்ரீம் கோர்ட், பேச்சுவார்த்தை என எந்த மத்தியஸ்தமும் இன்றி, அவரவருக்கு உரிய பங்கு தண்ணீர் அவரவர்களுக்கு செல்லும். இதை செயல்படுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் வலுவான உத்தரவை பிறப்பித்தாலே போதும்.