சிறையில் பிரியாணி, சிகரெட் கேட்ட ஜேஎன்யூ மாணவர்கள்
டெல்லி: தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் மோமோவும், அனிர்பன் பட்டாச்சார்யா பிரியாணியும், சிகரெட்டும் வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவை புகழ்ந்து மாணவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
அப்சல் குருவை புகழ்ந்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்ட மாணவர் சங்க தலைவர் கன்யா குமார், மற்றும் இரண்டு மாணவர்களான உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோரை தேச துரோக வழக்கில் டெல்லி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உணவு
பல்கலைக்கழக வளாகத்தில் சாப்பிட்டது போன்றே சிறையிலும் அதே வகையான உணவு வகைகளை உமர் காலித்தும், அனிர்பனும் எதிர்பார்ப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோமா, பிரியாணி
தனக்கு மோமோ வேண்டும் என்று உமர் காலித் போலீசாரை கேட்டுள்ளார். அனிர்பனோ தனக்கு பிரியாணியும், சிகரெட்டும் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
தேச துரோக வழக்கு
நீங்கள் இருவரும் தேச துரோக வழக்கில் சிறையில் உள்ளீர்கள். இங்கு எல்லாம் பல்கலைக்கழகம் போன்று வகை, வகையான உணவு கேட்டால் அளிக்க முடியாது. உங்களுக்கு மட்டும் பாரபட்சமாக உணவு அளிக்க மாட்டோம் என்று போலீசார் காலித் மற்றும் அனிர்பனிடம் தெரிவித்துள்ளனர்.
இல்லவே இல்லை
பிப்ரவரி 9ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ குமார், காலித், அனிர்பனுக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்த மூன்று பேரும் தாங்கள் குருவை புகழ்ந்தும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிடவே இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அது யாரோ
கோஷமிட்ட சிலரை வீடியோவில் போலீசார் காட்ட அதை பார்த்த காலித், குமார், அனிர்பன் அந்த நபர்களை தங்களுக்கு யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளனர். சிலர் கோஷமிட்டதாக அனிர்பன் தெரிவித்துள்ளார். யாரும் கோஷமிட்டதாக தெரியவில்லை என்று காலித் கூறியுள்ளார்.
விசாரணை
போலீசார் குமார், காலித், அனிர்பனிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் மூன்று பேர் அளித்த வாக்குமூலங்களை போலீசார் ஒப்பிட்டு வருகிறார்கள். மேலும் வெளியாட்கள் யாராவது பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து கோஷமிட்டனரா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.