அதெப்படி ஹபீஸ் சயீத்துக்கு 'சாகிப்'னு மரியாதை கொடுக்கலாம்? ஐ.நா. மீது இந்தியா கடும் கோபம்!!
டெல்லி: மும்பை தாக்குதலின் மூளையான தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கேரி கிலான், "சாகிப்" என்று மரியாதையுடன் அழைத்துள்ளது இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மும்பையில் 166 பேரை படுகொலை செய்த 2008ஆம் ஆண்டு தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் ஹபீஸ் சயீத். இவனது லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஐ.நா.
அதேபோல் ஹபீஸ் சயீத்தையும் தீவிரவாதியாக பட்டியலிட்டது ஐ.நா. அத்துடன் லஷ்கர் இ தொய்பா, ஹபீஸ் சயீத்தின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதியன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கேரி கிலான் செய்திக்குறிப்பு ஒன்றில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா குறித்தும், அதன் தலைவரான ஹபீஸ் சயீது குறித்தும் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடனும், அதனுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக ஐ.நா. நிறைவேற்றிய தீர்மானங்கள் தொடர்பான விஷயங்களும் அந்த செய்திக்குறிப்பில் இடம்பெற்றிருந்தன.
அதில், ஹபீஸ் சயீதை "சாஹிப்' என்று மரியாதையுடன் கேரி கிலான் குறிப்பிட்டிருந்தார் இதற்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அத்துடன் இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவரிடம் கோரியுள்ளது.