ஆதார் அடையாள அட்டையை கட்டாயப்படுத்தும் மத்திய அரசு.. வரமா, சாபமா?
பெரிய அளவில் முறைகேடுகளை ஆதார் சிஸ்டம் குறைத்துள்ளது. எனவே பல லாபிகள் இதை கெடுத்துவிட முயல்வதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த அந்த லாபிகள் முயலும்.
டெல்லி: ஆதார் அடையாள அட்டையை கட்டாயப்படுத்த கூடாது என கூறியும் ஏன் கட்டாயப்படுத்தியுள்ளீர்கள் என சமீபத்தில் வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியது. ஆனால், ஆதார் கட்டாயம், முறைகேடுகளை தடுக்கும் என்பது அரசு வாதம்.
ஆதார் நமது அடையாளங்களை பிறருக்கு அம்பலப்படுத்திவிடும் என்ற குறை சொல்லிகள் ஒருபக்கம், ஆதார் நமக்கு கிடைத்த வரப் பிரசாதம் என புகழுரைப்போர் மறுபக்கம்.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் கர்வா, இவர் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை உருவாக்குவது மற்றும் செயல்படுத்தும் பணிகளின் ஆரம்ப கட்டத்திலேயே அதில் ஒரு அங்கமாக இருந்தவர். 'ஒன்இந்தியாவுக்காக' அவர் தனது கருத்துக்களை இப்படி பகிர்ந்துள்ளார் பாருங்கள்.
(ஆதார் கார்டுடன் பான் கார்டை எப்படி இணைப்பது என்று தெரியுமா..?)
ஆதார் என்பது முழுக்க அடையாள அட்டை பயன்பாட்டுக்கானது. கைரேகை, கண் கருவிழி படலம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. உலக நாடுகளில் பிறந்த சான்றிதழில் இருந்து அடையாள அட்டை உருவாகுகிறது. 2008ல் உலக வங்கி வெளியிட்ட புள்ளிவிரப்படி இந்தியாவில் 52.8 சதவீதம் பேறுகாலங்கள்தான் திறமையான ஊழியர்களை கொண்டு நடைபெறுகிறது. வளர்ந்த நாடுகளில் 99 சதவீத பேறுகாலம் மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது. அந்த நாடுகளில் பிறப்பின்போதே எளிதாக அடையாள அட்டை கொடுத்துவிடுகிறார்கள். பயோமெட்ரிக் முறைகள் அங்கு தேவைப்படவில்லை.
ஆதார் முறையில் தவறுகளே நிகழ வாய்ப்பில்லை எனவும் கூறிவிட முடியாது. அதேநேரம் 98 சதவீதம் தவறாது. இரு விரல்களை 3 முறை பயன்படுத்தி தகவல்களை சேமிப்பது, கண் விழிப்படலம் ஒற்றுமை போன்றவை சரியாக பதிவு செய்யப்பட்டால் அது பலனை தரும். சரியான தகவல்களை பதிவு செய்வது, பதிவு செய்யும் ஊழியர் திறமை போன்றவற்றின் மீது ஆதார் அட்டைகளின் வெற்றி உள் அடங்கி உள்ளது. அதேநேரம், இதை சரி செய்துகொள்ள முடியும்.
கைரேகையை விடவும், கண் விழித்திரை படலத்தை கொண்டு அடையாளம் சரி பார்ப்பது எளிய வழியாக இருக்கும் என்பது நடைமுறை உண்மை. ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யப்படும்போதே, ஐடி கார்டு உள்ளிட்ட பல ஆதாரங்கள் மூலம் அடையாள அட்டையை சிறப்பாக வடிவமைத்துக்கொள்வது மோசடிகள் நடப்பதை தவிர்க்க உதவும்.
அரசு துறை பணிபரிமாற்றங்களில் ஆதார் அடையாள அட்டை முக்கியபங்காற்றுகிறது. நிதி சேமிப்பு எளிதாகிறது. இதற்கு முன்பு வாக்காளர் அடையாள அட்டைதான் முக்கியமான அடையாள அட்டையாக இந்தியாவில் இருந்தது வந்தது. ஆனால் இந்த அடையாள அட்டையை இரு இடங்களில் கூட ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும். 18 வயதுக்கு உட்பட்டோருக்கு இந்த அடையாள அட்டை கிடைக்காது.
பிரபலமாக இருந்த இரண்டாவது அடையாள அட்டை ரேஷன் கார்டுகள். குடும்ப தலைவர் பெயருடன் குடும்பத்தார் பெயர், வயது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றிருக்கும். இது பிற மாநிலங்களில் செல்லுபடியாவதில் சிக்கல் இருந்தது. இதிலும் போலிகள் உலவின.
ஆனால் ஆதா் அடையாள அட்டையை ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பெற முடியாது. அங்க அடையாளங்கள் உள்ளிட்ட விவரங்கள் இருப்பதால் ஆதாரில் கோல்மால் செய்ய முடியாது.
பிற அடையாள அட்டை விவரங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ட்ரூகாலரில் ஒருவரின் பெயரை எப்படி அறிந்து கொள்ள முடியுமோ அதைப்போலத்தான் பிற சிஸ்டம்கள் ஆனால் ஆதார் விவரங்களை நாம் எதற்காக கொடுக்கிறோமோ அதை தவிர்த்து வேறு எதற்கும் பயன்படுத்த முடியாதபடி, ஆதார் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது. இன்னமும் கூட பாதுகாப்பை அதிகரிக்க நாம் கோர முடியும்.
ஆதார் அட்டை தற்போது பெரும்பாலான மக்களை சென்று சேர்ந்து பலனளிக்க தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் நாம் இதை மேலும் பலப்படுத்துவது எப்படி என்பது குறித்துதான் பேச வேண்டும். ஆனால் காலனி மனநிலையிலுள்ள சில இந்தியர்கள், அரசு மீதே சந்தேகப்பார்வையை வீசுகிறார்கள். பெரிய அளவில் முறைகேடுகளை ஆதார் சிஸ்டம் குறைத்துள்ளது. எனவே பல லாபிகள் இதை கெடுத்துவிட முயல்வதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களிடம் குழப்பம் ஏற்படுத்த அந்த லாபிகள் முயலும்.
நானும் இந்த நாட்டு மக்களில் ஒருவர்தான். நான் எனது விவரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளேன். விவாதம் அந்த வழியில் போனால் ஆதார் ஐடி சிஸ்டத்தை மேலும் பலப்படுத்த பல ஐடியாக்கள் கிடைக்கலாம். இவ்வாறு ஸ்ரீகாந்த் கர்வா கூறியுள்ளார்.