பொது சிவில் சட்ட எதிர்ப்பு எதிரொலி: பழங்குடி மக்களின் கருத்துக்களை கோருகிறது சட்ட ஆணையம்
டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்த கருத்துக்களையும் ஆட்சேபங்களையும் தெரிவிக்குமாறு பழங்குடியின மக்களுக்கு மத்திய சட்ட ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த மக்களில் ஒரு தரப்பினர் இச்சட்டத்துக்கு எதிராக போராடத் துவங்கியதை அடுத்து அவர்களிடம் இருந்து கருத்து கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சட்ட ஆணையத்தின் தலைவர் பி.எஸ்.சவுகான் கூறியதாவது: ஆணையத்தின் முன்பாக பழங்குடியின மக்களும் தங்களது கருத்துக்களை முன்வைக்கலாம் . பொது சிவில் சட்டம் குறித்த அவர்களின் நிலைப்பாட்டினையும் அறிந்து கொள்ள சட்ட ஆணையம் விரும்புகிறது.
பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பது போன்று பழங்குடியின மக்களும் இடம்பெறலாம். அவர்களின் பிரதிநிதிகளும் பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைக்கலாம் என்றார்.
பழங்குடியின மக்களின் பழக்க வழக்கம், மதச் சடங்குகள், பண்பாடு ஆகியவற்றுக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு திணிக்க முயல்வதாக அந்த இனமக்களில் ஒரு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பலதார மணம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு எதிரான பொது சிவில் சட்டத்திலிருந்து தங்களது மக்களை பாதுகாக்க வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஆதிவாசி ஏக்தா பரிஷத் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தங்களது தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் பாரம்பரியமும் முழுமையாக பாதிக்கப்படும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துக்களில் இருந்து தாங்கள் பல்வேறு பழக்கவழக்கங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் வேறுபட்டு இருப்பதாகவும், ஆகையால் இந்துக்களின் வரிசையில் தங்களை சேர்க்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்குகளில் கூட இந்துக்களுக்கும் தங்களுக்கும் வேறுபாடு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை இஸ்லாமியர்களின் தலாக் விவகார வழக்குடன் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரரைணக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.