டி.சி. பெறாமல் வெளியேறும் சிறுபான்மையினர் வேலைவாய்ப்பு பெற 'நயி மன்சில்' திட்டம்
டெல்லி: சிறுபான்மையின இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற நயி மன்சில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
2015-2016ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலன் கருதி நயி மன்சில் என்ற திட்டம் அறிவிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய பட்ஜெட்டை தாக்கல் செய்த ஜேட்லி, சிறுபான்மையின இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்பு பெற நயி மன்சில் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அறிவித்தார்.
இந்த நயி மன்சில் திட்டத்தின்படி மதரஸாக்கள், பள்ளிகளில் இருந்து டி.சி. பெறாமல் வெளியேறும் சிறுபான்மையின இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் சிறுபான்மையினரின் நலன் கருதி ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வியல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜேட்லி அறிவித்துள்ளார்.