ஷாக்கிங்.. நாடாளுமன்றத்தில் விவாதித்து காவிரி மேலாண்மை வாரியம்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது என்றும் காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழக்கில் வாதாடிவிட்ட நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் இன்று வாதம் முன் வைத்தார்.
காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வழி வகை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அப்போது கருத்து தெரிவித்தது. அதை செய்வோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
அதிகாரம் இல்லையாம்
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரமுள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனைமட்டும் வழங்கலாம் என்று மத்தியஅரசு வழக்கறிஞர் வாதம் முன் வைத்தார்.
பேதங்கள் இல்லை
நதிநீர் பங்கீடு விவகாரங்களில் அனைத்து தரப்பிற்கும் சாதகமாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது, பேதங்கள் கிடையாது என்று மத்திய அரசு தனது வாதத்தின்போது தெரிவித்தது.
நாடாளுமன்றம் தலையிடும்
நதிகள் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது, மாநிலங்கள் சுயமாக நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவு என்பது நாடாளுமன்றத்தில் விவாதித்து செயல்படுத்தப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றும், நாடாளுமன்றத்தில் வாதம் நடத்திய பிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முடிவு எடுக்க முடியும் என அரசு கூறியுள்ளது.
கர்நாடக ஆதரவு
மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்திற்கு எதிராகவும், கர்நாடகாவுக்கு ஆதரவாகும் உள்ளது என்று விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டுகிறார்கள். காவிரி நடுவர்மன்றம் என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு இணையான அதிகாரம் கொண்ட அமைப்பு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவர்மன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை திருத்துவோம், விவாதிப்போம் என கூறுவது பெரும் தவறு என்று தமிழக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.