உ.பி. மாட்டுக்கறி கொலை: முதியவர் குடும்பத்துக்கு ரூ.45 லட்சம் நிவாரணம் அறிவித்தார் அகிலேஷ்
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு மொத்தம் 45 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அம் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தேவைப்பட்ட அரசுப் பணியும் வழங்குவோம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
உ.பி மாநிலத்தில் பிசடா என்னும் கிராமத்தில் பசுவின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக கடந்த திங்கட்கிழமை அக்லாப் என்பவர் கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கடந்த 5 நாட்களாக போலீசார் தீவிரவமாக தேடி வந்தனர்.
இதில் முக்கிய குற்றவாளிகளான விஷால் ராணா, சிவம்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அக்லாப் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்துவதற்கு பொதுமக்களை திரட்டி சதித்திட்டம் தீட்டியவர் விஷால் ராணா தான் என்று போலீசார் தெரிவித்தனர். அக்லாப் கொலையில் விசாரணைக்கு பிசடா கிராமவாசிகள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அக்லாப் குடும்பத்தினர் உ.பி மாநில முதல்வர் அகிலேஷ் யாதவை அவருடைய வீட்டில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவிசெய்வோம், அவர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பணி வழங்குவோம், என்று கூறினார்.
இக்லாக்கின் குடும்பத்திற்கு மாநில அரசின் நிவாரணத் தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் அறிவித்தார். மேலும், இக்லாக்கின் 3 சகோதரர்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அக்லாப் குடும்பத்தினர்,எங்களுக்கு ஆதரவு அளித்த முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நீதி வழங்கப்படும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என்று கூறினர்.