முலாயம் சிங்கால் மிரட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி திடீர் சஸ்பெண்ட்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவால் மிரட்டப்பட்டதாகக் கூறப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அமிதாப் தாகூர் திடீரென சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சிவில் பாதுகாப்பு பொது ஆய்வாளராக இருப்பவர் அமிதாப் தாகூர். இவர் முலாயம்சிங் யாதவ் தம்மை மிரட்டியதாக கடந்த சனிக்கிழமை போலீசில் புகாரளித்தார்.
இதற்கு ஆதாரமாக 2 நிமிடங்கள் 10 நொடிகள் கொண்ட தொலைபேசி உரையாடல் பதிவையும் அமிதாப் தாகூர் வெளியிட்டார். அதேநேரத்தில் முலாயம்சிங் யாதவ் மிரட்டியது சரியானதே என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் நியாயப்படுத்தியும் இருந்தார்.
இந்த களேபரம் அடங்குவதற்குள் அமிதாப் தாகூர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தது புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அமிதாப் தாகூரோ, என் மீதான பாலியல் பலாத்கார புகாருக்கு, எந்தவித அடிப்படை ஆதாரமும் கிடையாது. முலாயம் சிங்குக்கு எதிராக நான் புகார் அளித்தேன். அதற்குப் பரிசாகத்தான், என் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. என்னிடம் வேலைக்கு வந்த பெண்ணை நான் பலாத்காரம் செய்து விட்டதாக, புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவரம், எனக்கு கடிதம் மூலமாக தெரிய வந்தது என்றார்.
மேலும் தாம் மிரட்டப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் முலாயம் சிங் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமிதாப் தாகூர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் திடீரென அவரை நேற்று சஸ்பென்ட் செய்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது புதிய பஞ்சாயத்துக்கு வழிவகுத்துள்ளது.
அதிகாரி மறுப்பு
இதனிடையே தாம் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை.. தம் மீதான அரசின் புகார்கள் ஆதாரமற்றவை என்று சஸ்பென்ட் ஆன அதிகாரி அமிதாப் தாகூர் மறுத்துள்ளார்.