உ.பி.யில் புதிய சர்ச்சை- பீர் கடையை திறந்து வைத்த பெண் அமைச்சர்- விளக்கம் கேட்கும் முதல்வர் 'யோகி'
உ.பி.பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராகவுள்ள சுவாதி சிங், மதுபானக் கடையை திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் மது பார் ஒன்றை திறந்து வைத்த பெண் அமைச்சரால் சர்ச்சை ஏற்பட்டு அமளிதுமளி ஆகியுள்ளது அம்மாநில அரசியல். அமைச்சர் சுவாதி சிங் பீர் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் புகைப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் சுவாதி சிங். இவர் லக்னோ பீர் விற்பனை மையத்தில், புதிய பார் ஒன்றைத் திறந்து வைத்துள்ளார்.
மதுபான பார் வாசலில் இருந்த ரிப்பனை வெட்டி, திறந்து வைக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து விளக்கமளிக்குமாறு அமைச்சர் சுவாதி சிங்கை, முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, அமைச்சர் சுவாதி சிங்கின் இந்த செயலை அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன. இதுகுறித்து பதிலளிக்க சுவாதி சிங் மறுப்பு தெரிவித்துவிட்டார். பாஜக ஆளும் உ.பியில் இப்படி ஒரு நிலையா என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன.