கடிவாளத்தை கழட்டிவிட்ட உச்சநீதிமன்றம்...ஹேப்பி.. ஹேப்பி. கொண்டாடும் சமூகவலைதள'வாலு'கள்!!
டெல்லி: ஃபேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களே கதியென குடியியிருந்து கொண்டு உலகின் அத்தனை கண்டத்து நடவடிக்கைகளையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் வலைவாசிகள் இன்று அப்படி ஒரு உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.. அவர்களுக்கு கடிவாளம் போட்டுக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66வது ஏ பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதுதான் காரணம்..
மத்திய அரசு 2008ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 66-ஏ பிரிவு என்கிற திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதனடிப்படையில் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தால் 3 ஆண்டுகால சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிலைமை உருவானது.
இதனடிப்படையில் நாடு முழுவதும் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெரும் பரபரப்பையும் கிலியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் 66-ஏ பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று 66-ஏ பிரிவை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
நல்ல காலத்துலேயே 'நர்த்தனமாடும்' வலைவாசிகளின் கருத்து மூளைகள் இந்த 66-ஏ கடிவாளம் கழற்றப்பட்ட பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பு வந்த பிறகு எப்படியெல்லாம் நடனமாடும் என சொல்லவா வேண்டும்?
ட்விட்டருக்குப் போனா "#No66A", #sec66A என்ற பல ஹேஸ்டேக்குகள் போட்டு ட்விட்டர் குடிமகன்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..
ஃபேஸ்புக் போனா 66-ஏ பற்றி பக்கம் பக்கமா எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் கருத்து கந்தசாமிகள்.
ஆனாலும் ஏக இஷ்டத்துக்கு விமர்சித்துவிட எந்த ஒரு சட்டமும் அனுமதிக்கவில்லை என்பதையும் வலைவாலுகள் நினைவில் கொள்ளவும் வேண்டும்.