சீக்கியர்களுக்கு எதிரான பிரச்சாரம்: அமிதாப் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
இந்த சம்மன் அவரது ஹாலிவுட் முகவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 1984-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ‘ரத்தத்துக்கு ரத்தம்' என்று கோஷம் எழுப்பி, இக் கலவரத்தை தூண்டி விட்டதாக, நடிகர் அமிதாப்பச்சனுக்கு எதிராக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர்நீதிமன்றத்தில் சீக்கிய உரிமை அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில், அமிதாப்பச்சனுக்கு நீதிமன்றம் சம்மன் பிறப்பித்தது.
அந்த சம்மன், அமிதாப்பச்சனின் ஹாலிவுட் முகவர் டேவிட் ஏ.உங்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சிவில் நடைமுறை விதிகளின்படி, சம்மன் ஒப்படைக்கப்பட்ட 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர் பதில் அளிக்க வேண்டும்.
எனவே, மார்ச் 17-ந் தேதிக்குள் அமிதாப்பச்சன் பதில் அளிக்க தவறினால், அவருக்கு எதிராக தண்டனை நடவடிக்கை மற்றும் இழப்பீடு உத்தரவு பிறப்பிக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகப் போவதாக சீக்கிய உரிமை அமைப்பின் சட்ட ஆலோசகர் குர்பத்வந்த் சிங் பன்னும் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை அமிதாப்பச்சன் ஏற்கனவே மறுத்தது நினைவிருக்கலாம்.