‘ஒழுங்கா பணம் கூட எண்ணத் தெரியாதவரை கட்டிக்கிட்டு என்ன செய்ய’... கல்யாணத்தை நிறுத்திய பெண்!
லக்னோ: பணத்தைக் கூட சரிவர எண்ணத் தெரியாத மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட மாட்டேன் என உத்திரப்பிரதேசத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளார் பெண் ஒருவர்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பால்லியா மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கும், பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்ற வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் நிச்சயித்தனர். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை பாலியா மாவட்டத்தின் பன்ஸ்டீ பகுதியில் உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற இருந்தது.
அப்போது தான் மாப்பிள்ளைக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்ற உண்மை மணப்பெண்ணிற்கு தெரிய வந்தது. இது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரித்த போது அவர்கள் மழுப்பலாக பதில் கூறியுள்ளனர்.
இதனால் மேலும் சந்தேகமடைந்த மணப்பெண், தானே மாப்பிள்ளைக்கு டெஸ்ட் ஒன்றை வைக்க முடிவு செய்தார். அதன்படி, மாப்பிள்ளையிடம் கத்தையாக ரூபாய் நோட்டுகளை அள்ளித்தந்து. ‘இதில் எவ்வளவு பணம் இருக்கின்றது என எண்ணிச் சொல்லுங்கள்' என அப்பெண் கூறியுள்ளார்.
மணமகனும், விரல்களில் எச்சில் தொட்டு, எச்சில் தொட்டு, ரூபாய் நோட்டுகளை எண்ணி முடித்து, ஒவ்வொரு முறையும் தப்பும் தவறுமாக தொகையை மாற்றி, மாற்றி கூறினார். இதையடுத்து, கழுத்தில் இருந்த மணமாலையை கழற்றி கீழே எறிந்த மணப்பெண், மாப்பிள்ளைக்கு ‘கெட் அவுட்' கூறி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தகராறு செய்துள்ளனர். இந்த விவகாரம் பஞ்சாயத்துக்குப் போனது. வழக்கை விசாரித்த பஞ்சாயத்தார், ‘மணமகன் சரியாக எழுதப் படிக்க தெரியாதவர் என்ற உண்மையை மறைத்து ஒரு பட்டதாரி பெண்ணை திருமணம் செய்ய முயன்றது உங்கள் குற்றம். எனவே, பிரச்சனையை பெரிது பண்ணாமல் மரியாதையாக இங்கிருந்து போய் விடுங்கள்' என மாப்பிள்ளை வீட்டாரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.