உ.பி. துணை முதல்வர்களாக கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா தேர்வு !
உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இரண்டு துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ: உத்திரபிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பாஜக 312 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள், 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
இதையடுத்து முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் லக்னோவில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோரக்பூர் தொகுதியின் லோக்சபா பாஜக எம்.பியான யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் உ.பி. பாஜக தலைவர் கேசவ்பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மதியம் 2.15 மணிக்கு பதவியேற்க உள்ளனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
உ.பி. முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் நாட்டிலேயே மிக இளம் முதல்வராக கருதப்பட்டார். தற்போது அவரைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் இளம் வயது முதல்வராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.