அமைச்சர்கள் 15 நாட்களுக்குள் சொத்து விவரத்தை அளிக்க வேண்டும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக ஆதித்யநாத், துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் நேற்று பதவியேற்றனர்.
துறவியான ஆதித்யநாத், அரசியலில் தூய்மை வேண்டும் என விரும்புகிறாராம். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு உ.பி.யில் நல்லாட்சி தர பாஜக தலைமையும் அவரிடம் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், அனைத்து அமைச்சர்களும் அவர்களுடைய வருமானம், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விவரத்தை அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களுக்குள் இந்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த சொத்துக்களின் அளவு கூடுகிறதா என்பதை கண்காணிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியும், தனது அமைச்சரவை சகாக்களிடம் இவ்வாறு சொத்து விவரங்களை கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.