பொது இடங்களில் செல்ஃபி எடுத்தால் அபராதம்.. உயிரிழப்பைத் தடுக்க உ.பி. போலீஸ் அதிரடி
நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டும் பயணம் செய்த படியும் செல்ஃபி எடுப்பவர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதால் உ.பி. மாநில போலீசார் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
மொரதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பொது இடங்களில் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உயரமான கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள், தண்டவாளங்கள், பேருந்து நிலையங்கள் என்று முக்கிய இடங்களில் நின்று செல்ஃபி எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், அவ்வாறு செல்ஃபி எடுப்போர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
இதைத் தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலனின்றி போனது. இதன் தொடர்ச்சியாக, மொரதாபாத் நகரில் பொது இடங்களில் செல்ஃபி எடுத்துக் கொள்ள அந்நகர காவல்துறை தடை விதித்துள்ளது.
செல்ஃபி எடுத்தால் ரூ. 250 அபராதம்
தடையை மீறி செல்ஃபி எடுத்தால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மொராபாத் போலீசார் கூறுகையில், " செல்ஃபி மோகம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
அப்பாவிகள் உயிரிழப்பு
இதன் காரணமாக ஆபத்தான இடங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயன்று, பலர் தங்கள் உயிருக்கு உலை வைக்கும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனவே செல்ஃபி மோகத்தால் உயிரிழப்பதை தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ரோந்து பணி தீவிரம்
மேலும், செல்ஃபிக்கு தடை விதித்த பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே மும்பையில் பாந்திரா பாண்டு ஸ்டாண்டு, கடற்கரை உள்பட 15 இடங்களில் செல்ஃபி எடுப்பதற்கு மும்பை போலீசார் தடை விதித்துள்ளனர்.
தொடரும் செல்ஃபி தடை
மும்பையில் தடையை மீறி ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பவர்களுக்கு மும்பை போலீஸ் ரூ.1,200 அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பொது இடங்களில் செல்ஃபிக்கு தடை வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.