உஸ்பெக் அழகியுடன் விமானப்படை அதிகாரிகள் உல்லாசம்- யுஎஸ் வக்கீல் பரபர தகவல் #varungandhi
டெல்லி: மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், எம்.பியுமான வருண் காந்தி மீது பரபரப்புப் புகார்களைக் கூறியுள்ள அமெரிக்க வழக்கறிஞர் எட்மாண்ட்ஸ் ஆலன், இந்திய விமானப்படை அதிகாரிகள் கும்பலாக உஸ்பெகிஸ்தான் அழகியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட ரூ. 7000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை இதுபோல வெளிநாட்டு அழகிகளை வைத்து ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா மடக்கியதாகவும் இதற்குத்தான் வருண் காந்தியை அவர் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆலன் கூறியுள்ளார்.
பல விமானப்படை அதிகாரிகளுக்கு இதில் தொடர்புள்ளதாக கூறியுள்ள ஆலன், இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
விமானப்படை ஒப்பந்தம்
ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா, தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு, இந்திய விமானப்படையின் ரூ. 7000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தர விரும்பினார். இதற்காக அவர் வருண் காந்தியைப் பயன்படுத்திக் கொண்டார். அதேபோல அப்போது ஏர் மார்ஷலாக இருந்த ஹரீஷ் மசந்த்தின் உதவியையும் நாடினார். மசந்த் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
பெண்களை வைத்து
இதற்காக வெளிநாட்டுப் பெண்களை களம் இறக்கினார் வர்மா. அவர்களை வைத்து வருண் காந்தியை மடக்கினார். அதுதொடர்பான புகைப்படங்களை வருண் காந்தியிடம் காட்டி அவரை மிரட்டி, தொடர்ந்து ஒப்பந்தம் தொடர்பான தகவல்களைப் பெற்றார். இந்தத் தகவல்களை வைத்து தன்னுடைய வாடிக்கையாளரான அமெரிக்காவின் ஹாக்கர் பீச்கிராப்ட் நிறுவனத்திற்கு உதவினார்.
பயிற்சி விமான ஒப்பந்தம்
பீச்கிராப்ட் நிறுவனத்தின் பயிற்சி விமானங்களை இந்தியா விமானப்படைக்கு வாங்கும் ஒப்பந்தம் அது. இதற்காகவே இந்த வேலையில் அபிஷேக் வர்மா இறங்கினார். இதற்காக பெண்களை வைத்து பலரையும் அவர் மடக்கினார்.
உஸ்பெகிஸ்தான் அழகிகள்
உஸ்பெகிஸ்தான் பெண்களையே அவர் பயன்படுத்தினார். இதற்காக மசந்த், ஒரு மூத்த விமானப்படை அதிகாரி (அவர் தற்போதும் பணியில் உள்ளார்), மேலும் சில அதிகாரிகளுடன் உஸ்பெகிஸ்தான் அழகியை உல்லாசமாக இருக்க விட்டார். அனைவரும் சேர்ந்து அந்த அழகியுடன் உல்லாசமாக இருந்தனர்.
2010ல்
2010ம் ஆண்டு பீச்கிராப்ட் நிறுவனம் தனக்குத் தேவையான ரகசியத் தகவல்களைப் பெறுவதற்காக மசந்த்தை வேலைக்கு நியமித்தது. இதன் மூலம் இந்திய விமானப்படைத் தகவல்கள் பலவற்றை மசந்த் அவர்களுக்குக் கொடுத்தார் என்று ஆலன் கூறியுள்ளார்.
மசந்த் மறுப்பு
ஆனால் இந்தப் புகார்களை மறுத்துள்ளார் மசந்த். இதுகுறித்து என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், பீச்கிராப்ட் நிறுவனம் என்னை நியமித்தது உண்மைதான். ஆனால் அபிஷேக் வர்மாவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவர்களுக்கு நான் ஆலோசனை கூறினேன். வர்மாவுடன் 2009ல் எனக்கு சிறிய அளவிலான தொடர்பே இருந்தது. என்னிடமிருந்து சில தகவல்களைப் பெற லஞ்சம் கொடுக்க அவர் முயற்சித்தார். நான் மறுத்து விட்டேன். எந்தத் தகவலையும் தரவில்லை என்று கூறியுள்ளார் மசந்த்.
ஆலனின் கடிதம் வட இந்திய அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.