நிலம் கையப்படுத்தும் சட்ட மசோதா எதிர்ப்பு.. ஒரே மேடையில் ஹசாரே, கெஜ்ரிவால், வைகோ, மேதா!
டெல்லி: சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே நடத்தி வரும் போராட்ட மேடைக்கு வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்து அவருடன் சில மணி நேரம் அமர்ந்தார். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மேடையில் பேசினார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார்.
வைகோ பங்கேற்பு
இரண்டாவது நாளான இன்றைய போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் பங்கேற்றனர். இன்றைய போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாடல்கள் வாயிலாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கெஜ்ரிவால் பங்கேற்பு
இந்நிலையில் டெல்லியில் ஹசாரே துவக்கிய போராட்டத்திற்கு கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்தார். நேற்று, ஹசாரே தங்கியிருந்த இடத்திற்கு சென்று, அவரை கெஜ்ரிவால் சந்தித்தார். இன்று ஹசாரே போராட்டம் நடத்தும் மைதானத்திற்கு வந்தார்.
வரவேற்ற வைகோ
மேடையில் அமர்ந்திருந்த ம.தி.மு.க., பொதுசெயலர் வைகோ, கெஜ்ரிவாலை கட்டித்தழுவி வரவேற்றார். ஹசாரேவும் அவரை வரவேற்றார்.
விவசாயிகளுக்கு துரோகம்
போராட்ட மேடையில் கெஜ்ரிவால் பேசுகையில்; நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியமானது. தற்போதைய மசோதா விவசாயிகளுக்கு துரோகம் செய்வதற்கு சமம். மோடி அரசு நில புரோக்கர் போல் செயல்படுகிறது. விவசாயிகள் ந யாரிடமும் நிலத்தை நிர்பந்தித்து வாங்க கூடாது. நிலம், வீடுகளை புல்டோசர் வைத்து இடித்தால் அவர்கள் அரசை இடித்து விடுவார்கள், என்றார்.
ஹசாரேயின் வலது கரம்
லோக்பால் மசோதா கொண்டு வரவேண்டும் என கடந்த 2012ல் ஹசாரே போராட்டம் நடத்திய போது கெஜ்ரிவால் ஹசாரேயின் வலது கரமாக செயல்பட்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்தார். பின்னர் அரசியல் கட்சி துவக்கி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்று டெல்லி முதல்வர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இதன் பின்னர், கெஜ்ரிவாலும், ஹசாரேவும் அதிகம் சந்தித்து கொள்ளாமல் இருந்து வந்தனர்.
66 எம்.எல்.ஏக்களுடன்
இன்றைய தினம் 66 எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஹசாரேயின் போராட்டத்தில் பங்கேற்றதை ஏராளமான இளைஞர்களும்,விவசாயிகளும் வரவேற்றனர்.
இணைந்த மேதாபட்கர்
ஹசாரேவின் போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேதாபட்கரும் இணைந்து நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிராக குரல் எழுப்பினார்.
ஒரே மேடையில்
அன்னாஹசாரேயின் போராட்ட மேடையில் முதல்வர் கெஜ்ரிவால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூக போராளி மேதாபட்கர் ஆகியோர் இணைந்து பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.