வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது: டிச.25ல் அறிவிப்பு வெளியாகும்?
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதி மோடி அரசு இதற்கான அறிவிப்பினை வெளியிடலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு சேவை செய்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் ‘பாரத ரத்னா' வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஜ்பாய்க்கு வரும் 25ந் தேதி 89 வயது முடிந்து 90 வயது பிறக்கிறது. அப்போது வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதுகொடுப்போம் என பா.ஜ.க அறிவித்திருந்தது.
பிரதமர் மோடி, வாஜ்பாயை தன் குருவாக ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். வாஜ்பாயின் பிறந்த நாளை மோடி ‘நல்லாட்சி தினமாக' கொண்டாட வேண்டும் என மோடி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை ஆண்டு முதல் பாஜக பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். 5ஆண்டுகாலம் முழுமையாகவும், சிறப்பாகவும் ஆட்சி புரிந்தார். அதேபோல டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த சுதந்திர போராட்ட தியாகி மதன் மோகன் மால்வியாவிற்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.