இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சரிந்தால்.. இவருக்குத்தான் பேரடி கிடைக்கும்!
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு போதாத காலம் என்று கூறப்படும் நிலையில் அதன் முன்னோடியான வாணி கோலா சற்றும் அசராமல் அஞ்சாமல் இருக்கிறார்.
பெங்களூரு: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவன சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டால், வாணி கோலாவுக்கு மிகப் பெரிய பொருளாதார அடி கிடைக்கும். காரணம், இவர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் போட்டு வைத்துள்ள மிகப் பெரிய முதலீடு.
52 வயதாகும் வாணி கோலா, பெங்களூரைச் சேர்ந்த கலாரி கேபிடல் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களில் இவரும் ஒருவர். இவர் முதலீடு செய்யாத நிறுவனங்களே என்று கூறும் அளவுக்கு பல்வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு "ஸ்டார்ட்அப் தாயாக" விளங்குகிறார் வாணி. 60க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இவருக்குப் பங்குகள் உள்ளன. 650 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டுத் தொகை உள்ளது. இவர் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் முக்கியமானது பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல்.
போதாத காலம்
இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்குப் போதாத காலமாக மாறியுள்ளது. குறிப்பாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அடி வாங்க ஆரம்பித்துள்ளன. இதனால் பல நிறுவனங்கள் முதலீடுகளைக் குறைத்து விட்டன. உள்ளூர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பல அடி வாங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அசராத வாணி
ஆனால் வாணி அசரவில்லை. தொடர்ந்து அவர் முதலீடுகளைத் தொடர்கிறார். மேலும் பல சிறுமுதலீட்டாளர்களை உருவாக்கவும் அவர் தீவிரமும், ஆர்வமும் காட்டி வருகிறார்.
பிரச்சினை சரியாகும்
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தளர்ந்து விட்டதாக கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன். அவர்களின் பிரச்சினையிலிருந்து மீண்டு வர நிச்சயம் அவர்களால் முடியும். அவர்களால் இதைச் சமாளிக்க முடியும் என்று முழுமையாக நான் நம்புகிறேன் என்றார் வாணி.
டிவி வாணியும், வாணி கோலாவும்
டிவி சீரியலில் வரும் "வாணி" போலத்தான் இந்த வாணி கோலாவும். தில்லாக எதிலும் இறங்குபவர். இவரிடம் தோல்வியை விட நிறைய வெற்றிகளே குவிந்து கிடக்கின்றன. 2006ம் ஆண்டு 210 மில்லியன் டாலர் முதலீட்டை உருவாக்கினார். இன்டெல் நிறுவனத்தின் பென்டியம் சிப்பை உருவாக்கிப் பிரபலமான வினோத் தாமுடன் இணைந்து இதைச் சாதித்தார் வாணி. அதுதான் அவரது முதல் தொழில் முயற்சி. ஈ காமர்ஸில் துணிச்சலாக கால் வைத்தவரும் கூட வாணி. அதன் எதிர்காலம் குறித்து நிச்சய நிலை இல்லாத காலகட்டம் அது.
சாதனையாளர்
வினோத்தை விட்டுப் பிரிந்த பின்னர் 440 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டி அனைவரையும் அசர வைத்தார். ஒரு பெண் முதலீட்டாளர் தனி ஆளாக அவ்வளவு பெரிய தொகையை திரட்டி முதலீடு செய்தது அதுவே முதல முறை என்பதால் அது சாதனையாக மாறியது. தனது நிறுவனத்தின் மூலம் 84 முதலீடுகளை மேற்கொண்டார் வாணி. அதில் 21 ஸ்டார்ட்அப்களை அவர் விற்றார்.
பாராட்டும் பய்
இவர் குறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பய் கூறுகையில், இன்டர்நெட் பிசினஸுக்கு ஆரம்ப கட்டத்திலேயே வந்தவர் வாணி. அப்போது பலருக்கும் இத்துறையின் விஸ்வரூபம் தெரியாமல் இருந்தது. ஆனால் வாணி தைரியமாக இறங்கியவர் என்று பாராட்டுகிறார்.
20 வயதிலேயே
ஹைதராபாத்தில் பிறந்தவர் வாணி. என்ஜீனியரிங் படித்தவர். அமெரிக்காவில் மாஸ்டர் டிகிரியை முடித்தார். முதல் பிசினஸ் ஐடியாவை இவர் உருவாக்கியபோது இவருக்கு வயது 20தான். 1996ல் நாடு திரும்பிய அவர் தனது தந்தையிடம், தான் ஒரு நிறுவனத்தை உருவாக்கப் போவதாக கூறினார். அதற்கு தந்தை ஊக்கம் கொடுத்தார்.
திரும்பிப் பார்க்க வைத்தார்
இதையடுத்து தந்தை கொடுத்த உற்சாகத்துடன் ரைட்ஒர்க்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தை உருவாக்கினார். சர்வதேச அளவில் சாப்ட்வேர் பொருட்களை வாங்கி, விற்கும் பணியை இது செய்தது. இவரிடம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம், பெப்சிகோ நிறுவனம் ஆகியவை வாடிக்கையாளராக சேர்ந்தபோது அனைவரும் வாணியை திரும்பிப் பார்த்தனர். நான்கே ஆண்டுகளில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மிகப் பெரிய முதலீட்டாளராக உருவெடுத்தார் வாணி.
உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு ஊக்கம்
ஆரம்பத்தில் அமெரிக்காவிலிருந்தபடி செயல்பட்ட வாணி பின்னர் நாடு திரும்பி தனது நிலையை மேலும் விஸ்தரித்தார். செர்டஸ் சாப்ட்வேர் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினார். பல முதலீட்டாளர்களை ஈர்த்தார். வெளிநாட்டு நிறுவனங்களை விட இங்குள்ள நிறுவனங்களுக்குத்தான் சாதகமான சூழல் அதிகம் என்பதை அவர் முதலீட்டாளர்களிடம் தெளிவுபடுத்தி அவர்களைத் திரளச் செய்தார்.
ஸ்னாப்டீல் -பிளிப்கார்ட்
2013ல் ஸ்னாப்டீல் நிறுவனம் கிட்டத்தட்ட மூடப்படும் நிலையை எட்டியிருந்தது. அவர்களுக்குக் கை கொடுத்தார் வாணி. தனது நிதியிலிருந்து 20 சதவீதத்தை அதில் முதலீடு செய்தார். ஸ்னாப்டீல் தப்பிப் பிழைத்தது. அது மட்டுமல்லாமல் மைந்த்ரா, வயா உள்ளிட்ட பல ஆன்லைன் நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளார். மைந்த்ரா பின்னர் விஸ்வரூபம் எடுத்து பிளிப்கார்ட்டையும் வாங்கியது வரலாறு.
டாடாவே சொல்லிட்டார்
முடியாது என்பதையும் முடியும் என்று நம்புபவர் வாணி.. இதைச் சொன்னது வேறு யாருமல்ல சாட்சாத் ரத்தன் டாடாதான். வாணியின் திறமை பற்றி சொல்வதற்கு இதை விட வேறு பெரிய வார்த்தை தேவைப்படாது.