கங்கை நதியில் படகுகள் மூலம் மதனைத் தேடும் போலீசார்!
வாரணாசி: காசியில் சமாதியாகப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவீஸ் மதனை வாரணாசி போலீசார் படகுகள் மூலம் கங்கை நதியில் தேடி வருகின்றனர்.
குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராக வலம் வந்தவர் மதன். பாரிவேந்தரின் எஸ்ஆர்எம் குழும கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பாளராகவும் இருந்தார்.
இவருக்கும் பாரிவேந்தருக்கும் இடையில் மனத்தாங்கல் ஏற்பட்டதால், தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு காசிக்குப் போய்விட்டார். அப்போதிலிருந்து இவரைத் தேடும் பணி தொடர்கிறது.
மதனைத் தேடி அவர் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் காசிக்கு விரைந்துள்ளனர். இன்னொரு பக்கம் வேந்தர் மூவீஸின் சிஇஓவான தயாரிப்பாளர் டி சிவா மற்றும் சிலரும் காசிக்குச் சென்றுள்ளனர். அங்கு காசி போலீஸ் ஐஜியிடம் விஷயத்தைக் கூற, அவரும் ஒரு தனி போலீஸ் படையை அனுப்பி மதனைத் தேட உத்தரவிட்டுள்ளார்.
5 படகுகள் மூலம் காசி கங்கை நதியில் மதனைத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மதன் காசியில் தங்கியிருந்து ஓட்டல் அறையைக் கண்டுபிடித்துள்ளனர். அவரது பைகள் உள்ளிட்ட பொருட்களும் அறையில் இருந்ததை சிவா உறுதி செய்துள்ளார்.