கர்நாடகாவில் 'கட்டப்பாவுக்கு' எதிராக போராட்டம் இல்லையாம்.. வாபஸ் பெற்றார் வாட்டாள் நாகராஜ்!
கர்நாடகாவில் நடிகர் சத்யராஜ்க்கு எதிராக நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் சத்யராஜ்க்கு எதிராக நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்தில் நடிகர் சத்யராஜ் கட்டப்பா கதாப்பாத்திரத்தில் நடித்தர்.இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.
முதல் பாகத்தில் எழுந்த கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கு இரண்டாம்பாகத்தில் பதில் உள்ளதாக தெரிகிறது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
கன்னடர்களுக்கு எதிராக சத்யராஜ்
இந்நிலையில் காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்கும் நடிகர் சத்யராஜ் கர்நாடகத்துக்கு எதிராக பேசியிருந்தார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் கர்நாடகத்துக்கு எதிராக பேசியிருந்தார்.
28ஆம் தேதி போராட்டம்
இதனால் சத்யராஜ் நடித்த பாகுபலி - 2 படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய வாட்டாள் நாகராஜ் தலைமையிலான குழு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சத்யராஜ்க்கு எதிராக வரும் 28ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போராட்டம் வாபஸ் - அறிவிப்பு
இந்நிலையில் தனது பேச்சுக்காக நடிகர் சத்யராஜ் கன்னடர்களிடம் நேற்று மன்னிப்பு கோரினார். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கவனமாக பேச எச்சரிக்கை
நடிகர் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் வரும் 28ஆம் தேதி கர்நாடகாவில் பாகுபலி 2 படம் வெளியாகும் என தெரிகிறது.