மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் வெங்கையா நாயுடு!
டெல்லி: பாஜக சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடு தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல்லியில் பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
68 வயதான வெங்கையா நாயுடு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தமது அமைச்சர் பதவியை வெங்கையா நாயுடு ராஜினாமா செய்துள்ளார். அவர் நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்க உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.