பாஜக கூட்டணியை ஜெயலலிதா தவிர்த்தது ஏன்..? பேச்சுவார்த்தை ரகசியத்தை வெளியிட்ட வெங்கையா நாயுடு
டெல்லி: நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா ஏன் அச்சமடைந்தார் என்ற தகவலை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு செய்தி வெளியாகும் சில மணி நேரங்கள் முன்பிருந்தே சென்னையில் முகாமிட்டவர் வெங்கையா நாயுடு. ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படும்வரை ராஜாஜி ஹாலில் நாள் முழுக்க காத்திருந்தார் அவர்.
இந்த நிலையில், ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், கடந்த சட்டசபை தேர்தல் நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுக தவிர்த்தது ஏன் என்பது குறித்த ஒரு ரகசியத்தையும் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றபோது ஜெயலலிதா அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதற்கு அவர் கூறிய காரணம், "ஆட்சியிலுள்ள கட்சிக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிர்ப்பு ஓட்டுக்கள் இருக்கும். இந்த நிலையில், பாஜகவோடு நாங்கள் கூட்டணி வைத்தால், குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைக்காது. இதனால்தான் பாஜகவோடு கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று, மோடியிடம் கூறிவிடுங்கள்" என ஜெயலலிதா கூறினார். இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.