துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவே மாட்டேன்: வெங்கையா நாயுடு திட்டவட்டம்
துணை ஜனாதிபதி பதவிக்கு தாம் ஒருபோதும் போட்டியிடப் போவதே இல்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
டெல்லி: துணை ஜனாதிபதி பதவிக்கு தாம் ஒருபோதும் போட்டியிடப் போவதில்லை என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது. பாஜகவின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் உள்ளனர்.
இதனிடையே துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ந் தேதி முடிவடைகிறது. தற்போது துணை ஜனாதிபதியாக யார் நிறுத்தப்படுவார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
துணை ஜனாதிபதி யார்?
துணை ஜனாதிபதி பதவிக்கு தொடக்கம் முதலே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பெயர்தான் அடிபட்டு வருகிறது. ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர் தேர்வு குழுவில் வெங்கையா நாயுடு இடம்பெற்ற நிலையில் அவர் துணை ஜனாதிபதி வேட்பாளராவாரா? என்ற கேள்வி எழுந்தது.
செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை வெங்கையா நாயுடு சந்தித்தார். அப்போது அவரிடம் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
மக்களுக்காக...
இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, மக்களை நேரில் சந்தித்து சேவை செய்வதில் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி. அவர்களிடம் இருந்து விலகி இருக்கக் கூடிய எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்.
நிராகரிப்பேன்
மக்களோடு மக்களாக இருக்கவே விரும்புகிறேன். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வற்புறுத்தினாலும் நான் அதை ஏற்கப் போவதில்லை என்றார்.