துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிப்பு!
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்டில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 18 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்துக்கு பின்னர் துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 11 மணிக்கு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி பதவிக்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டு விட்டதால், துணை ஜனாதிபதி பதவிக்கு தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்புவதாக செய்தி வெளியாகிய நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.