ஜல்லிக்கட்டுப் புரட்சியால் கிலி... திடீரென 'தமிழர் கலாசாரம்' மீது பாசம் காட்டுவதாக நடிக்கும் மோடி!
உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் தமிழினத்தின் ஜல்லிக்கட்டுப் புரட்சியால் வெலவெலத்துப் போயுள்ளார் பிரதமர் மோடி.
டெல்லி: உலகை உலுக்கிய புரட்சிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டுப் புரட்சியும் சேர்ந்துவிட்டது. தமிழக அரசியல் தலைவர்களே தங்களது எதிர்காலம் என்னவாகுமோ என பீதியில் உறைந்து போயுள்ளனர். இளைஞர்கள், மாணவர்கள் கையில் தமிழக அரசியல் போய்விட்டது. இதனால் அலறிப்போய் கிடக்கும் பிரதமர் மோடி திடீரென தமிழர் கலாசாரம் மீது பாசம் காட்டுவதாக ட்விட்டரில் பதிவிட்டு இன்னொரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகர்கள் என்ற உணர்வுடன் இந்த போராட்டம் மிகப்பெரிய புரட்சி வேள்வியாக மாறியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பது போராட்டக்குழுவினரின் கோரிக்கை.
தமிழகம் முழுவதும் 500 இடங்களில் 25 லட்சம் பேர் குடும்பத்துடன் வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூர் வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி இன்று டுவிட்டரில் ஜல்லிக்கட்டு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். தமிழர்களின் கலாச்சார உணவுகளை காக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் தமிழக பண்பாட்டை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
We are very proud of the rich culture of Tamil Nadu. All efforts are being made to fulfil the cultural aspirations of Tamil people.
— Narendra Modi (@narendramodi) January 21, 2017
முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பேசிய போதும், இதையேத்தான் பிரதமர் மோடி கூறினார். இப்போதும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழர்களின் கலாச்சாரத்தை மதிப்பவராக இருந்தால் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தமிழகத்தின் பக்கம் பாஜக தலைவர்கள் எட்டிப்பார்க்க முடியும் என்பது உறுதி.