ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தருணம் வந்துவிட்டதாம்... சொல்கிறது வி.ஹெச்.பி.
டெல்லி: ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் தருணம் வந்துவிட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
குஜராத்தில் படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்துத்துவா அமைப்புகள் இடஒதுக்கீடே வேண்டாம் என்ற குரலை ஒலித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச் செயலாலர் சுரேந்திரா ஜெயின் கூறியதாவது:
இடஒதுக்கீடு பிரச்சினையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஒரு நிலையான கொள்கையைக் கொண்டுள்ளது. ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை.
இந்திய அரசியலமைப்பை கட்டமைத்தவர்களுக்கும் இடஒத்துக்கீடு குறித்து இதே நிலைப்பாட்டுடன் தான் இருந்திருக்கின்றனர். முதலில் சில ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிட்டு பின்னர் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வழிகாட்டுதலாக இருந்தது.
குஜராத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தை உற்று நோக்கும்போது உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு ஆணையம் அமைத்து இடஒதுக்கீடு ஏன் தேவை எங்கு தேவை என்பன குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது. இடஒதுக்கீடு என்பதை பொருளாதாரத்தின் பின் தங்கியவர்களுக்கு மட்டும் வழங்கும் வகையில் வடிவமைக்கலாம்.
இட ஒதுக்கீடு கோரி ஓரிடத்தில் நடைபெறும் போராட்டம் மற்றொரு இடத்துக்கும் பரவும். உ.பி.யில் ஜாட் சமூகத்தினரும், ராஜஸ்தானில் குஜ்ஜார் இனத்தவரும் போராட்ட களத்தில் குதிப்பர்.
இடஒதுக்கீடு சர்ச்சையை அதிகப்படியான சமூகத்தினர் கிளப்பும்போது, அதை தீவிரமாக பரிசீலிப்பது அவசியம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடஒதுக்கீடு போராட்டங்கள் மீது தான் நம் நாட்டின் கட்சிகள் அரசியலை வளர்க்கின்றன.
இவ்வாறு சுரேந்திரா ஜெயின் கூறியுள்ளார்.