இந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம்: வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா
போபால்: இந்தியாவில் உள்ள இந்து மக்கள் தொகையை 100 சதவீதமாக அதிகரிப்போம் என்று மூத்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இந்து சம்மேளன நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்தியா இந்து நாடு என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மூத்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
உலகம்
ஒரு காலத்தில் இந்த உலகில் இந்துக்கள் மட்டுமே இருந்தனர். இந்தியாவில் உள்ள இந்து மக்கள் தொகையை தற்போதுள்ள 82 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
இந்துக்கள்
இந்து மக்கள் தொகை பாதியாக குறைவதை பார்த்து சகித்துக் கொண்டிருக்க மாட்டோம். இந்நாட்டில் இந்துக்கள் சிறுபான்மையினராவதை சகித்துக் கொள்ள முடியாது.
காதல் ஜிஹாத்
காதல் ஜிஹாத் என்பது இந்துக்களுக்கு எதிரான சதி. இந்து சமுதாயத்தில் இருந்து சாதி என்ற சமூக கொடுமையை நீக்க விஸ்வ இந்து பரிஷத் விரும்புகிறது.
வெங்கய்யா நாயுடு
மக்கள் தாங்களாக மதம் மாறினால் பிரச்சனை இல்லை. அதே சமயம் அவர்களை வலுக்கட்டாயமாக மதம் மாறச் செய்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.