”என் குழந்தை இன்னும் அதிர்ச்சியிலிருக்கிறாள்” - பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவியின் தந்தை உருக்கம
பெங்களூரு: பெங்களூருவில் உடற்பயிற்சி ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான என் மகள் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என அக்குழந்தையின் தந்தை உருக்கமாக கூறினார்.
கடந்த 2014 ஜூலை 3 ஆம் தேதி மாரத்தஹள்ளியில் உள்ள விப்ஜியார் பள்ளியில் 7 வயது மாணவியை உடற்பயிற்சி ஆசிரியர்கள் லால்கிரி, வாசிம் பாஷா ஆகியோர் உடற்பயிற்சி அறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
சில நாட்கள் கழித்து வயிற்று வலியால் துடித்த மாணவியை பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்றனர். பரிசோதனையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அமைப்புகளின் போராட்டம் எதிரொலியாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மேல், "போக்சோ" பாலியல் பலாத்கார குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகி மீதும் வழக்கு பதிவானது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மகள் குறித்து தந்தை, "இச்சம்பவத்துக்கு பின் எங்கள் மகளை வேறு பள்ளியில் சேர்த்து உள்ளோம். அதிர்ச்சியிலிருந்து அவள் பூரணமாக விடுபடவில்லை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. இவ்வழக்கில் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.