அடுத்த துணை ஜனாதிபதி யார்? பாஜக வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு
புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பாஜக அடுத்த வாரம் அறிவிக்கிறது. நாடாளுமன்ற அனுபவம் பெற்ற ஒருவரை வேட்பாளராகக் களம் இறக்குவது என்று பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.
டெல்லி: புதிய துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பாஜக அடுத்த வாரம் அறிவிக்கிறது.
தற்போதுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய, வருகிற 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கும் இடையே பலமான நேரடி போட்டி நிலவுகிறது.
இதே போல துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவி காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிவடைகிறது. புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது.
பாஜக அறிவிப்பு
துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த நிலையில் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை பாஜக தலைமை அடுத்த வாரம் அறிவிக்கிறது. நாடாளுமன்றத்தில் அனுபவம் பெற்றவரை வேட்பாளராக களம் நிறுத்துவது என்று பாஜக முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற அனுபவம் பெற்ற வேட்பாளர்
ராஜ்யசபாவை வழிநடத்தி செல்வதில் சிறந்தவராகவும், அதே நேரத்தில் நாடாளுமன்ற அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று பாஜக கருதுகிறது. இதனால் அதற்கு ஏற்ற வகையிலான நபரை வேட்பாளராக களம் நிறுத்தும் பணியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
மோடி பயணத்திற்கு பின்..
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 9ம் தேதி நாடு திரும்புகிறார். இதனால் அடுத்த வாரத்தில் தனது வேட்பாளரை பாஜக அறிவிக்கிறது. துணை ஜனாதிபதி தேர்தலில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.
பாஜகவின் வெற்றி வாய்ப்பு
நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 790 ஆக உள்ளது. இரு சபை எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பாஜகவுக்கே கூடுதல் எம்.பி.க்கள் பலம் உள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலை போலவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.