சென்னை பெண்ணை பலி கொண்ட பெங்களூர் குண்டுவெடிப்பு.. குண்டு வைத்தவன் வீடியோ வெளியீடு
பெங்களூர்: பெங்களூர் எம்.ஜி.ரோடு பகுதியில் 2014ம் ஆண்டு டிசம்பரில் வெடிகுண்டை வெடிக்க செய்து, சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் மரணத்திற்கு காரமணமாக இருந்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் உருவம் அடங்கிய வீடியோவை தேசிய பாதுகாப்பு ஏஜென்சியான என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.
2014ம் ஆண்டு, டிசம்பர் 28ம் தேதி பெங்களூர், எம்.ஜி.ரோடை அடுத்த சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி, மண்டை ஓடு உடைந்ததில், சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த பவானி தேவி என்ற இரு குழந்தைகளின் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்து மீண்டனர்.
துப்பு கிடைக்கவில்லை
இந்த கொலை தாக்குதல் வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு தேக்கமடைந்தது.
செல்போன் துப்பு
எம்.ஜி.ரோடு பகுதியில் பதிவான செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்களை வைத்து பெங்களூர் போலீசார் சோதித்து பார்த்தனர். ஆனாலும் துப்பு கிடைக்கவில்லை.
தேசிய பாதுகாப்பு ஏஜென்சி
பெங்களூர் போலீசாரால் விசாரிக்க முடியாத நிலையில், சமீபத்தில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு எடுத்தது. என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சம்பவ இடத்தின் அருகே பதிவான வீடியோவில் ஒரு காட்சி அவர்களுக்கு சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
கையில் பை, தலையில் தொப்பி
எம்.ஜி.ரோடு பகுதியில் கையில் பையுடன், தலையில் தொப்பியும், நீல நிற சட்டையும் அணிந்து செல்லும் நபர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்துள்ளது.
வீடியோ வெளியீடு
சந்தேகத்திற்கிடமான அந்த நபர் கையில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தகவல் கொடுங்களேன்
இந்த வீடியோவிலுள்ள நபர் குறித்து தகவல் தெரிந்தால், பெங்களூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது,. ஆனால் வீடியோவிலுள்ள நபரின் முகம் க்ளோசப்பில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.