ஆடிய ஆட்டமென்ன.. ஓடிப் போன விஜய் மல்லையாவின் அரசியல் "தாம் தூம்"!
டெல்லி: இந்தியாவின் முன்னணி வங்கிகளை ஜஸ்ட் லைக் தட் ஏமாற்றி விட்டு நாட்டை விட்டு ஓடிப் போய் விட்ட விஜய் மல்லையா, இடையில் சில காலம் அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதை மாஸ் காட்ட பயன்படுத்திக் கொண்டாரே தவிர மக்களுக்காக அவர் எதையுமே செய்யவில்லை என்பதை உண்மை. மக்கள் குறித்து ஒருபோதும் அவர் கண்டுகொண்டதே இல்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் கிட்டத்த ரூ. 9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. மல்லையாவோ இந்தியாவில் இருந்து கிளம்பி லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார்.
நாட்டை விட்டு ஓடிப் போகும் வரை பல விஷயங்களைச் செய்து அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர் மல்லையா. யாராலும் செய்ய முடியாததை செய்து காட்டி அசரடித்தவரும் கூட.
திப்பு சுல்தான்
முன்னர் திப்பு சுல்தானின் வாள் ஏலத்தில் வந்தபோது அதை ரூ.1.57 கோடி கொடுத்து வாங்கினார். ஒரு அருங்காட்சியகம் அமைத்து திப்பு சுல்தான் சம்பந்தப்பட்ட பொருட்களை அங்கு காட்சிக்கு வைக்க விரும்புவதாக கடந்த 2004ம் ஆண்டு பெங்களூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
தேர்தல்
அருங்காட்சியகத்திற்காக திப்பு சுல்தானுக்கு சம்பந்தம் உள்ள பொருட்கள் எங்கு ஏலத்திற்கு வந்தாலும் அதை ஏலத்தில் எடுக்கப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்ட நேரத்தில் அவர் (சுப்பிரமணியம் சாமியின்) ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இருந்தார். அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. இந்நிலையில் திப்பு சுல்தான் விஷயத்தை கையில் எடுத்தால் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் மல்லையா போட்ட கணக்கு துவக்கத்தில் இருந்தே தப்புக் கணக்காகிவிட்டது என்று அவருடன் அவரது விமானத்தில் கோழிக்கோடு வரை சென்று மல்லையவின் தேர்தல் பிரச்சார தகவல்களை சேகரித்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ஒன்இந்தியாவிடம் கூறினார்.
பணம்
அந்தத் தேர்தலில் மல்லையா பணத்தை தண்ணீராக செலவு செய்தார் என்றும் அந்த பத்திரிக்கையாளர் மேலும் தெரிவித்துள்ளார். கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜனதா கட்சி காங்கிரஸுக்கு மாற்றாக அமையும் என்று அவரிடம் மல்லையா கூறினாராம்.
தனி விமானம்
மல்லையா பெங்களூரில் இருந்து 30 பத்திரிக்கையாளர்களை தனது விமானம் மூலம் கோழிக்கோடு அழைத்துச் சென்றார். அவரது பிரச்சார செய்தியை வெளியிடவே பத்திரிக்கையாளர்களை அவர் அழைத்துச் சென்றார். விமானத்தில் சென்ற அனைவருக்கும் அளவின்றி மது வழங்கப்பட்டது. மல்லையாவின் உதவியாளர் அதிகமாக குடித்துவிட்டு விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்கியபோது அவரால் எழுந்து நடக்க முடியவில்லை.
தொழில் அதிபர்
மல்லையா ஒரு தொழில் அதிபராகவே நடந்து கொண்டார். அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் பலர் கட்சி உறுப்பினர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்தனர். இது தவறு என்று எனக்கு தோன்றியது. மல்லையா பிரச்சாரம் செய்தபோது உள்ளூர் மக்களின் பிரச்சனைகள் குறித்து அவர் கண்டுகொள்ளவில்லை.
பணம் பணம் பணம்
அரசியலில் ஜாதி முக்கிய பங்கு வகிக்கிறது. அதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. கோழிக்கோட்டில் எங்களை எல்லாம் தாஜ் மலபார் ஹோட்டலில் தங்க வைத்தார். பணத்தை வாரி இறைப்பதில் தான் அவர் குறியாக இருந்தார்.
தோல்வி
எப்பொழுதுமே பிரச்சாரத்தை ஒரு மணிநேரம் தாமதமாகவே ஆரம்பித்தார். மக்களை வெயிலில் காக்க வைத்தார். அவர் வந்தாலும் பாடிகார்டுகள், மேள தாளம் என அமர்க்களமாகத் தான் வந்தார். அப்போதே அவர் தோல்வி அடைவது உறுதியாகிவிட்டது. இறுதியில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார் என்றார் அந்த பத்திரிகையாளர்.