நீட் தேர்வு: டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் முகாம் - மத்திய அமைச்சர்களுடன் தொடர் சந்திப்பு
நீட் தேர்வுக்கு தற்காலிகமாக விலக்கு பெற்று விட வேண்டும் என்று டெல்லிலேயே முகாமிட்டு மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.
இதற்கிடையே, மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். இதனால், மருத்துவப் படிப்புக் கான கலந்தாய்வு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் 20ஆம் தேதி டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தினர்.
அதன்பின் 24ஆம் தேதி லோக்சபா துணைத் தலைவர் மு.தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்தனர்.
குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த முதல்வர் கே.பழனிசாமியும் பிரதமர் மோடியை சந்தித்து நீட் தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தினார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றனர். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பிரதமர் அலுவலகத்துக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக இறுதிக்கட்டமாக கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, 85 சதவீத உள்ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
இதனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லியில் முகாமிட்டு, விலக்கு பெற முயற்சித்து வருகிறார்.
வருமான வரித்துறை அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது. சம்மன் அனுப்பி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறது. எனினும் தன்மீதான ஊழல் கறையை துடைக்க நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று விட வேண்டும் என்று நினைக்கிறார் விஜயபாஸ்கர்.