அது வேற வாயி... நேற்றைக்கு ஹீரோ, இன்னைக்கு ஜீரோ... திரில் படங்களை மிஞ்சும் "திகில் கேப்டன்"!
டெல்லி: நேற்றுதான் தமிழக அரசியலில் திடீர் ஹீரோவான விஜயகாந்த், 24 மணி நேரத்திற்குள், இன்று சர்ர்ர்ரென சறுக்கி, வழக்கம் போல பழைய ஜீரோவாக காட்சியளிக்கிறார்.
தமிழக அரசியலில் ஒரு சூனிய நிலை காணப்படுகிறது. ஆளும் கட்சியின் தலைவர் வெளியுலக தொடர்பின்றி இருப்பதால், ஆளும் கட்சியினர் மிகவும் அடக்க, ஒடுக்கமாக நடந்து கொண்டுள்ளனர். பெரிய திட்டங்களை செயல்படுத்துவதை ஒத்திப்போடுகின்றனர்.
எதிர்க்கட்சிகள் வீக்
ஏற்கனவே, திமுக கடந்த சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் தோற்றுப்போனது. ஆனால் எதிர்க்கட்சியாக விஸ்வரூபம் எடுத்த தேமுதிகவோ, அதன் சொந்த எம்.எல்.ஏக்களை ஆளும் கட்சி பக்கம் சாய்வதை தடுக்க முடியாத நிலையில் உள்ளது.
எல்லாமே வீக்
இதனால் அரசியலில் ஒரு காலியிடம் உருவாகியுள்ளது. இதில் பாஜகவின் வளர்ச்சி, திமுகவையும் தனித்து தேர்தலை எதிர்கொள்ள யோசிக்க செய்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முழு வலிமையோடு இல்லாத இந்த காலகட்டத்தில்தான், அத்திப்பூத்தாற்போல ஒரு நிகழ்வு நேற்று நடந்தது.
விஜயகாந்த் சந்திப்பு
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், திடீரென, திமுக தலைவர் கருணாநிதி, பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உட்பட இன்னும் பல தலைவர்களையும் சந்தித்து, பிரதமரை சந்தித்து, காவிரி உள்ளிட்ட தமிழக பிரச்சினைகள் பற்றி பேச உள்ளதாகவும், ஆதரவு தருமாறும் கேட்டுக் கொண்டார்.
ஹீரோவான விஜயகாந்த்
விஜயகாந்த்தின் கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டன. பிரதிநிதிகளையும் அனுப்பி வைத்தன. தமிழக அரசியலில் இதுபோன்று கட்சிகள் ஓரணியில் திரளுவது அபூர்வ நிகழ்வு என்பதால், அதன் சூத்திரதாரியான விஜயகாந்த் மீது அரசியல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் பார்வை விழுந்தது. தமிழக அரசியல் மாற்றத்தின் வித்தகராக வர்ணனை செய்யப்பட்டார் விஜயகாந்த்.
அதற்குள் அந்தர் பல்டி
ஆனால், இதெல்லாம், நேற்று நடந்தது.. இன்று, 24 மணி நேரத்துக்குள் மீண்டும் விஜயகாந்த் பெயர் பரபரப்பாக பத்திரிகையாளர்கள் பேசப்படுகிறது. ஆனால் எதிர்மறை காரணத்துக்காக. விஜயகாந்த் தலைமையிலான குழு பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு, அதுகுறித்த செய்திதான் ஊடகங்களில் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ வேறு.
சொதப்பிய பிரஸ் மீட்
தமிழக ஆளும் கட்சி தொடர்புள்ள சேனல் நிருபர் கேள்விக்கு பதிலளிக்க மாட்டேன் என்று முரண்டுபிடித்த விஜயகாந்த் அடித்துவிடுவேன் என்று எழுந்து நெஞ்சை நிமிர்த்தி நின்று மிரட்டினார். இத்தனைக்கும் நிருபரின் கேள்வி ஒன்றும் சர்ச்சைக்குறியது இல்லை. அவர் சார்ந்த ஊடகமே விஜயகாந்த் கோபத்துக்கு காரணம். மேலும், பத்திரிகையாளர்களுக்கு அளித்த பதில்களும் வழவழ கொழகொழ ரகம்தான். என்னிடம் ஏன் கேக்குறீங்க, உங்களுக்கே தெரியுமே, நீங்களே எழுதுங்களேன் என்றுதான் பல்லவியை பாடிக்கொண்டிருந்தார்.
ஜீரோ
ஆகமொத்தத்தில், பிரஸ் மீட் அட்டர் பிளாப். நேற்று ஹீரோவாக பார்க்கப்பட்ட அதே விஜயகாந்த் இன்று ஜீரோவாகியுள்ளார். ஆனால், இதுதான் அவர் வாடிக்கை என்பதே வேடிக்கையான வேதனை. கிட்டத்தட்ட விஜயகாந்த்தின் துப்பறியும் திரைப்படங்களில் வரும் திடுக்கிடும் திருப்பங்கள் போல சென்றுகொண்டுள்ளது அவரது அரசியல் வாழ்க்கை.
விஜயகாந்த்தின் பலவீனத்தை சரியாக பார்த்துப் பார்த்து "அடிக்கிறது" ஆளுங்கட்சி.. அவர்தான் புரிந்து கொண்டு இன்னும் சுதாரிக்க மாட்டேன் என்று வீம்பாக இருக்கிறார்.!