"என்னென்னமோ சொல்றீங்க, எனக்கு எதுவுமே புரியலை".... விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர்தானா???
டெல்லி: தமிழகத்தின் பிரச்சனைகளுக்காக அனைத்துக் கட்சி குழுவினருடன் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் எந்த ஒரு கேள்விக்கும் தெளிவான பதில் அளிக்க முடியாமல் திணறினார்.... தமிழக அரசின் சர்ச்சைக்குரிய சர்வதேச முதலீட்டாளார்கள் மாநாடு குறித்த கேள்விக்கு "என்னமோ சொல்றீங்க எனக்கு ஒன்னுமே தெரியலை" என பாவமாக அவர் சொன்னதைப் பார்த்தால் "நீங்க எதிர்க்கட்சித் தலைவர்தானா?' என கேட்கும் நிலை ஏற்பட்டது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டும் விவகாரம்... 20 தமிழர்கள் ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகட்டும் பொதுவாக ஒரு அறிக்கையை வெளியிட்டு 'எதிர்க்கட்சி' தலைவர் 'கடமையை' செய்து கொண்டிருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.
ஆனால் திடீரென கருணாநிதி, இளங்கோவன் என அனைத்து கட்சித் தலைவர்களையும் ஒரே நாளில் சந்தித்து மறுநாளே டெல்லிக்கு அனைத்துக் கட்சிக் குழுவையும் அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்துவிட்டார் விஜயகாந்த். இந்த சந்திப்பு முடிந்த கையோடு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் விஜயகாந்த். விஜயகாந்த்துடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தி.மு.க. எம்.பி திருச்சி சிவா, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
எடுத்துக் கொடுத்த திருச்சி சிவா
அப்போது எதைப் பற்றி பேசுவது என தெரியாமல் விஜயகாந்த் முழிக்க, பக்கத்தில் இருந்த திருச்சி சிவா, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டும் பிரச்சனை....என சொல்ல.. விஜயகாந்தும் அதை கிளிபிள்ளை போல சொன்னார்..
20 தமிழர் பிரச்சனை
அடுத்து ஆந்திராவில் 20 தமிழர் சுட்டுப் படுகொலை என திருச்சி சிவா எடுத்துக் கொடுக்க விஜயகாந்தோ, ஆந்திரா அரசு ரூ25 லட்சம் வழங்க வேண்டும் என்றார்..
எந்த பேப்பர்?
பின்னர் "தே.மு.தி.க. "தலைமையில்" தி.மு.க. போன்ற கட்சிகள்" என தினமலர் செய்தியாளர் வெங்கட்ராமன் கேள்வி கேட்க முயற்சித்தார். உடனே விஜயகாந்த் குறுக்கிட்டு நீங்க நீங்க.. எந்த பேப்பர் என கேட்க 'தினமலர்' என்று பதில் வந்ததும்... அதான் அதான் இப்படியெல்லாம் கேட்கிறீங்க...உங்களுக்கு கேட்க உரிமை இருக்கு. எங்களுக்கு பதில் சொல்லாம இருக்க உரிமை இருக்கிறது என்றார்...
நாடாளுமன்ற பாதுகாப்பு
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுல ஒரு சி.எம்.க்கு எவ்வளவு பாதுகாப்பு கெடுபிடி,, இங்க அப்படி எல்லாம் இல்லை.. என்றார் விஜயகாந்த்.. அப்போது ஒரு செய்தியாளர், நாடாளுமன்றத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்கிறீர்களா? என்று கேள்வி கேட்க ஏதோ எடக்கு மடக்காக சொல்லிட்டோமா என திரு திருவென முழித்தபடியே 'ஆமா இல்லைங்கறேன்' என்று நழுவிவிட்டார்.
ஜெயா டிவி நிருபர் மீது பாய்ச்சல்- வெளிநடப்பு
அப்போது ஒரு செய்தியாளர் தொடர்ச்சியாக கேள்வி கேட்க,, எந்த டிவி என விஜயகாந்த் கேள்வி கேட்டார்.. அந்த செய்தியாளர் ஜெயா டிவி என்று சொன்னாரே பார்க்கலாம்.. விஜயகாந்துக்கு செம கோபம்... உங்களுக்கு கேட்கிற உரிமை இருக்கிற மாதிரி பதில் சொல்லாமல் இருக்க உரிமை என்றார் பொங்கிய கோபத்துடன்.... விடாமல் அவரும் தினமலர் செய்தியாளரும் கேள்வி கேட்க 'எடுத்து அடிச்சிருவேன்' என்று எகிறியபடி எழுந்தார் கேப்டன்... நான் ஜெயலலிதா பத்தி குண்டக்க மண்டக்க சொல்றேன்.. அப்படியே போடுவியா? அது என்ன பண்ணிடும்? கை காலை வெட்டிடுமா? என்றெல்லாம் பொங்கியபடி வெளிநடப்பு செய்தார்...
பின்னாலே போன ஏ.சி.சண்முகம் தடுத்துப் பார்த்தார்.. அவரைத் தொடர்ந்து மச்சான் சுதீஷ் சமாதானம் செய்து திரும்பவும் அழைத்து வந்தார்..
படிச்சு பார்க்கனுமே..
பின்னர், பவானிசிங் நியமனம் செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளதே என்ற கேள்விக்கு, நீங்க சொல்றதை வெச்சு பதில் சொல்ல முடியாது.. முழுமையாக படிச்சு பார்க்கனும் என்றார்.
என்னது சர்வதேச முதலீட்டாளர் மாநாடா?
'தமிழக அரசு சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை' ஒத்தி வைத்துள்ளதே என்ற கேள்விக்கு 'என்னமோ சொல்றீங்க..எனக்கு அப்படின்னா என்னான்னே தெரியலை" என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜயகாந்த்.
தமிழக அரசு நடத்துகிற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, அது ரத்து செய்யப்பட்டது, அது குறித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது என எந்த ஒரு ரணகளம் பற்றியும் தெரியாமல் என்னதான் செய்து கொண்டிருந்தாரோ 'மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்' விஜயகாந்த்?