மன்மோகன்சிங் காலத்தில் நியமிக்கப்பட்ட பிரதமரின் இணைச்செயலாளர் மாற்றம்
டெல்லி: சுமார் ஐந்தாண்டுகளாக, பிரதமரின் இணை செயலாளராக பதவி வகித்த ஜாவத் அஷ்ரப் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக பதவி வகித்த வினய் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
2012ல் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பிரதமரின் கூடுதல் செயலாளராக பதவிக்கு அமர்த்தப்பட்ட ஜாவத் அஷ்ரப், மோடி பிரதமரான பிறகும் அதே பதவியில் தொடர்ந்தார். இந்நிலையில், அவர் தற்போது அப்பதவியில் இருந்துவிடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக பதவி வகித்த வினய் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அஷ்ரப்பிடமிருந்து பணி தன்மையை வினய் கற்க வேண்டும் என்றும், அதன்பிறகே, அப்பதவியில் அவர் அமர்த்தப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான வெளியுறவுத்துறை இணை செயலாளராக இருந்த விக்ரம் துரைசாமி, உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்ட பிறகு அப்பதவிக்கு நியமனம் ஆனவர் வினய். தற்போது துரைசாமி, தென்கொரிய நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர், வெளியுறவு விவகாரங்களுக்கான அதிகாரிகளை கண்காணித்து தேவைப்படும் மாற்றங்களை முன்னெடுத்துவருவதாக கூறப்படுகிறது.