பணிப்பெண்ணை அறையில் அடைத்து அடித்த வினோத் காம்ப்ளி மீது வழக்கு
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது வீட்டில் வேலை செய்யும் பெண் சம்பளம் கேட்டதற்கு அவரை மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பவர் சோனி(43). சோனி தான் வேலை செய்ததற்கு உரிய சம்பளத்தை அளிக்குமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து காம்ப்ளியும், அவரது மனைவி ஆண்ட்ரியாவும் சேர்ந்து சோனியை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர். சோனியை அந்த அறையில் 3 நாட்களாக பூட்டி வைத்துள்ளனர். அதன் பிறகு அவரை வெளியே விட்டுள்ளனர்.
காம்ப்ளியின் வீட்டில் இருந்து வெளியே வந்த சோனி நேராக மும்பை பந்த்ரா காவல் நிலையத்திற்கு சென்று காம்ப்ளி மற்றும் அவரது மனைவி மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்துள்ள போதிலும் இன்னும் காம்ப்ளியை விசாரணைக்காக அழைக்கவில்லை.