ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.,.. டெல்லியில் பரபரப்பு!
ஏர் இந்தியா விமான ஊழியரை 25 முறை செருப்பால் அடித்து, சிவசேனா எம்.பி., கெயிக்வாத் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: ஏர் இந்தியா விமான ஊழியரை சிவசேனா எம்.பி., ரவீந்திர கெயிக்வாத் செருப்பால் அடித்த சம்பவம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர் சிவசேனா கட்சியை சார்ந்த ரவீந்திர கெய்க்வாத். இவர் ஏர் இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு இன்று காலை பயணம் செய்தார். அப்போது, விமானத்தினுள் உட்காரும் சீட் ஒதுக்கீடு காரணமாக பிரச்சினை எழுந்துள்ளது.
ரவீந்திர கெயிக்வாத் பிசினஸ் கிளாஸில் டிக்கெட் எடுத்திருந்த நிலையில், அவருக்கு எகானமி கிளாஸில் சீட் ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்தார். இதனால் அவர் விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தான் போட்டிருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை 25 முறை அடித்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் வந்து சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செருப்பால் விமான ஊழியரை அடித்ததை ஒத்துக்கொண்ட எம்.பி கெயிக்வாத், தான் மன்னிப்பு கோர முடியாது என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் தான் தன்னிடம் மன்ணிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.