நீதிபதி மீது மலத்தை எறிந்த மோட்டார் திருடன்!!
சாத்தூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளித்த நீதிபதி குன்ஹாவை அவமானம் செய்யும் வகையில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டி நீதித்துறைக்கு அவமானம் இழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விருதுநகர் மோட்டார் திருடன் ஒருவனும் நீதிபதியை வேறு வகையில் அவமானப்படுத்தியுள்ளான்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேலதாயில்பட்டியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (38). கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி மேட்டார் திருடிய வழக்கு சம்பந்தமாக, வெம்பக்கோட்டை போலீஸார் பாக்கியராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரனைக்காக இன்று காலை சாத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2ல் நிதிபதி மாரியப்பன் முன்பாக பாக்கியராஜ் ஆஜரானார். ஆனால் வழக்கு சம்பந்தமாக வெம்பக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்பிரபு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் விசாரனையை ஒத்தி வைத்துள்ளதாக நீதிபதி அறிவித்தார். இவ்வாறு நீதிபதி கூறிய உடன் பாக்கியராஜ் தனது கால்சட்டை பையில் மறைத்து வைத்திருந்த மனித மலத்தை எடுத்து நிதிபதியை நோக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இதில் நல்லவேளையாக நீதிபதியின் மீது மலம் விழாமல், அவரது டேபிளில் விழுந்தது. எதிர்பாரத இந்த சம்பவத்தால் சாத்தூர் நீதிமன்றமே அதிர்ச்சிக்குள்ளனாது. வக்கீல்களும், பாதுகாப்பு போலீசாரும், நீதிபதியுமே அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாக்கியராஜை காவல்துறையினர் நீதிமன்றத்திலிருந்து இழுத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து சாத்தூர் நகர் போலீஸார் பாக்கியராஜ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது: கைதியின் கால் சட்டையில் மலம் வாடை வீசுவது கூட தெரியாமல் போலீசார் அவரை கோர்ட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர். காவல்துறையினர் கவனக்குறைவாக உள்ளதால் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பாக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் நீதிமன்றத்தையே அவமதிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.