பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு, கோபால கிருஷ்ண காந்தி வேட்புமனு தாக்கல்
பாஜக துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடுவும், கோபால கிருஷ்ண காந்தியும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பாஜக வேட்பாளர் வெங்கையா நாயுடுவும், கோபால கிருஷ்ண காந்தியும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பாளரை பார்த்து பார்த்து தேர்வு செய்தது போல் துணை ஜனாதிபதி தேர்தலிலும் தேர்வு செய்துள்ளனனர். அதன்படி எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாஜக சார்பில் வேட்பாளரை தேர்வு செய்ய அக்கட்சியின் ஆட்சி மன்றக் கூட்டம் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பதால் இரு கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி பிரதமர் மோடி, அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் புடைச்சூழ தனது வேட்புமனுவை வெங்கையா நாயுடு காலை 11.30 மணிக்கு தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியும் 12.30 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சீதாராம் யெச்சூரி, சரத்யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.