47 பேரின் மர்ம மரணத்துக்கு ம.பி. பா.ஜ.க. முதல்வர் சவுகானே தார்மீக பொறுப்பு- காங். தாக்கு!
டெல்லி: வியாபம் முறைகேடு விவகாரத்தில் 47 பேர் மர்மமாக மரணமடைந்துள்ள நிலையில் தார்மீகப் பொறுப்பேற்காமல் எளிதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தப்பித்துவிட முடியாது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்கியுள்ளது. இந்த விவகாரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநில அரசின் தேர்வு வாரியம் மூலமாக முறைகேடாக பலர் அரசுப் பணி பெற்றிருக்கின்றனர். வியாபம் முறைகேடு எனும் இந்த ஊழலில் ஏராளமான அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 700க்கும் அதிகமானோர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய ஊழலாக விமர்சிக்கப்படும் வியாபம் முறைகேட்டில் ஆதாயம் அடைந்து சிக்கியவர்கள், தகவல் கொடுத்தவர்கள், பேட்டி எடுத்தவர்கள் என 47 பேர் இதுவரை அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். வியாபம் ஊழலைப் போலவே இந்த மர்ம மரணங்களும் பயங்கர அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கெனவே மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சாக்கோ இந்த மர்ம மரணங்கள் தொடர்பாக கூறியுள்ளதாவது:
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இந்த விவகாரத்தில் எளிதில் தப்பிவிட முடியாது. அவர்தான் நிச்சயம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஏற்கெனவே லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் சிக்கியுள்ளனர். தற்போது பாரதிய ஜனதாவின் சிவராஜ்சிங் சவுகானும் மர்ம மரண விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
இந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதுடன் பொறுப்பேற்கவும் வேண்டும்.
இவ்வாறு சாக்கோ கூறினார்.