மகாத்மா காந்தி படுகொலையில் கோட்சேவை தவிர்த்து மேலும் ஒருவருக்கு தொடர்பு?
மகாத்மா காந்தி படுகொலையில் கோட்சேவை தவிர்த்து மேலும் ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி: மகாத்மா காந்தி படுகொலையில் மேலும் ஒருவருக்கும் தொடர்பிருக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தேசப்பிதாமகாத்மா காந்தி, கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்தி படுகொலைக்கு நாதுராம் கோட்சே, விநாயக் தாமோதர் சாவர்கர் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நாதுராம் கோட்சே, நாராணயன் ஆப்தே ஆகியோருக்கு கடந்த நவம்பர் மாதம் 15- ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மனு
காந்தி கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் இதன் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை கண்டறிய புதிய விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மும்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பங்கஜ் ஃபட்னீஸ் தாக்கல் செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனுவில் என்ன?
அந்த மனுவில், மகாத்மா காந்தி மீது 4 குண்டுகள் பாயந்துள்ளன. அவரை சுட்ட கோட்சேவின் துப்பாக்கியில் 7 குண்டுகள் மட்டுமே பொருத்த முடியும். மேலும் அவரது துப்பாக்கியில் 3 குண்டுகள் சுடப்பட்டு மீதமிருந்த 4 குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர்.
4-ஆவது தோட்டா யாருடையது?
காந்திஜியின் உடலை துளைத்த 4-ஆவது தோட்டா யாருடையது. இந்த படுகொலை தொடர்பாக கடந்த 1966-ஆம் ஆண்டு நீதிபதி ஜே.எல்.கபூர் தலைமையிலான விசாரணை குழு நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் தோண்டி எடுக்கப்படவில்லை.
புதிய கமிஷன் தேவை
காந்திஜியின் கொலையின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. இதனால் பல்வேறு உண்மைகளை நாட்டுக்கு தெரியப்படுத்த புதிய விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.