நீர் மேலாண்மை சரியில்லை, நீர்ப் பங்கீடு அறிவியல் பூர்வமாக இல்லை: காவிரி நிபுணர் குழு
டெல்லி: காவிரி பாசனப் பகுதிகளில் நீர் மேலாண்மை சரியில்லை. நீர்ப் பங்கீடு அறிவியல் பூர்வமாக இல்லை. இரு மாநில விவசாயிகளுக்கும் சரியான அளவில் நீரை பகிர்ந்து தருவதற்கு பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட காவிரி தொழில்நுட்ப உயர் மட்டக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜா தலைமையிலான மத்திய அரசின் இந்தக் குழுவானது 40 பக்க அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை இன்று பரிசீலிக்கவுள்ள உச்சநீதிமன்றம் அதையொட்டி தனது உத்தரவுகளை இன்று வழங்கவுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிக்கை விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. அதிலிருந்து சில முக்கிய அம்சங்கள்:
- தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நீர்த் தேவைகளை கர்நாடகம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
- தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரை நம்பி உள்ளது.
- 12 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்வதற்கு சராசரியாக 133 டிஎம்சி தண்ணீர் தேவை.
- குடிநீர் தேவைக்காக 22 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.
- 2016 அக்டோபர் 1 முதல் 2007 மே வரை தமிழகத்திற்கு 160 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.
- கர்நாடகத்திற்கு அக்டோபர் 1 முதல் 2017 மே வரை 36.38 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.
- பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக 23.10 டிஎம்சி தேவைப்படுகிறது.
- அக்டோபர் முதல் 2017 மே வரை கர்நாடகத்தின் தண்ணீர் தேவை 59.48 டிஎம்சி ஆகும்.
- காவிரி பாசனப்பகுதியைச் சேர்ந்த அனைத்து மாநில விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
- கர்நாடக மக்களுக்கு காவிரி நீர்ப் பயன்பாடு குறித்து உரிய முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
- காவிரிப் பாசனப்பகுதி மாநிலங்கள் இந்த ஆண்டு கடுமையான வறட்சியைச் சந்தித்துள்ளன.
- பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்.
- கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் பெருமளவிலான விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது.
- நீர்ப் பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மிகப் பழமையானதாக உள்ளன. இப்போது அவற்றை செயல்படுத்துவது பொருத்தமற்றதாகவும் உள்ளது.
- அறிவியல் பூர்வமாக நீர்ப் பங்கீடும், பயன்பாடும் இப்பகுதிகளில் இல்லை.
- தண்ணீரின் மதிப்பை இப்பகுதிகளைச் சேர்ந்த யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.
- நூற்றாண்டு கால பழமையான அடிப்படைக் கட்டமைப்புதான் இப்போதும் உள்ளது. அது மேம்படவில்லை.
- பற்றாக்குறை தண்ணீரை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பது நவீன முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- தண்ணீர் இல்லாத காலத்தில் வேலைவாய்ப்பு போய் விடுகிறது. விவசாயக் கூலிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் மேட்டூர் அணை மட்டுமே டெல்டா விவசாயிகளின் ஒரே குடிநீர் ஆதாரமாகும்.
- குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய தொழில்நுட்பங்கள் தேவை.
- காவிரி பாசனப் பகுதிகளில் மாற்றுப்பயிர் முறை செயல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுபப்டி கடந்த அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஜா தலைமையிலான உயர் மட்டக் குழு கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பார்வையிட்டது என்பது நினைவிருக்கலாம். இரு மாநில அணைகள், தமிழக காவிரி பாசனப் பகுதிகளையும் இந்தக் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்தது.
காவிரி தொழில்நுட்ப உயர் மட்டக் குழுவின் முழு அறிக்கை: அறிக்கை 1 - அறிக்கை 2