பாகிஸ்தானுடனான வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்: மோடி
கொச்சி: பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வரவும், வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தவுமே பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் 2 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கொச்சியில் பாதுகாப்பு படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். நாட்டின் மிகப்பெரிய விமானம்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவில் வைத்து, முதல் முறையாக இந்த பாதுகாப்பு படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது.
இதில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைகளின் தளபதிகள் தல்பீர் சிங் (ராணுவம்), ஆர்.கே. டோவன் (கடற்படை), அருப் ராஹா (விமானப்படை) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மகிழ்ச்சி...
டெல்லிக்கு வெளியே நாம் முதன்முதலாக சந்தித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் அனைவரும் ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள் என நம்புகிறேன்.
மக்களைப் பாதுகாக்கிறார்கள்...
நமது பாதுகாப்பு படையினர் கடல்களைக் காக்கிறார்கள். எல்லைகளை பாதுகாக்கிறார்கள். நமது நாட்டையும், நாட்டு மக்களையும் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். இயற்கை பேரிடர்களின்போதும், சண்டைகளின்போதும், நிவாரணத்தையும், மக்களுக்கு நம்பிக்கையையும் அளிப்பதைத் தாண்டி செயல்படுகிறார்கள். நமது படைகள், நாட்டின் பன்முகத்தன்மையை, ஒற்றுமையை பிரதிபலிக்கிறார்கள்.
ஆதார சுருதி...
உலக பொருளாதாரத்தில், இந்தியா ஒரு புதிய ஒளி பொருந்திய நாடாக மட்டுமல்ல, பிராந்திய, உலக அமைதிக்கான, பாதுகாப்புக்கான, ஸ்திரத்தன்மைக்கான ஆதார சுருதியாகவும் பார்க்கப்படுகிறது.
பாக். பேச்சுவார்த்தை...
வரலாற்றின் போக்கை திருப்பும் முயற்சியாக, தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருகிற விதத்தில், அமைதியான உறவினை கட்டமைக்கும் விதத்தில், ஒத்துழைப்பினை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் விதத்தில், ஸ்திரத்தன்மையையும், வளத்தையும் மேம்படுத்தும் வகையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறோம்.
மிகப்பெரிய பலன்கள்...
அந்த பாதையில் எண்ணற்ற சவால்கள், தடைகள் உள்ளன. ஆனால் முயற்சி மதிப்புமிக்கது. ஏனெனில், அமைதியினால் கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியவை. நமது குழந்தைகளின் எதிர்காலமும் முக்கியம். நாம் தேசிய பாதுகாப்பு செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம்.
பாதுகாப்பு முக்கியம்...
ஆனால் நாம் ஒரு போதும் நமது பாதுகாப்பை விட்டு விட முடியாது. தீவிரவாதம் தொடர்பான அவர்களது வாக்குறுதியில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பதை நாம் கணிக்க வேண்டும்.
கவனம்...
சீனாவுடனும் நெருக்கமான உறவினை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நிலுவையில் உள்ள பிரச்சினைகள், எல்லையில் ஸ்திரத்தன்மையை காத்தல், பரஸ்பர புரிந்துகொள்ளுதலை வளர்த்தல், நம்பிக்கையை வளர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம்.
அண்டை நாடுகளுடன் உறவு...
நமது பாதுகாப்பு திறன்களை, கட்டமைப்புகளை தொடர்ந்து பலப்படுத்துவோம். அண்டை நாடுகளுடன் நெருக்கமான உறவை பராமரிப்போம். பிராந்திய, உலகளாவிய கூட்டாளித்துவத்தை வலுப்படுத்துவோம்" என அவர் தெரிவித்தார்.