மோடி உலகம் சுற்றியதால் பலன்கள் பல.. ஊழல் இல்லை.. ஜெட்லி சொல்லும் சாதனை ரகசியம்!
டெல்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஓராண்டு கால ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு அரசு நிர்வாகத்தில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கறுப்பு பணத்தை ஒழிக்க பாஜக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான முக்கியமான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்.
கடந்த ஓராண்டு ஆட்சியில் அரசு நிர்வாகத்தில் ஊழல் இல்லை. ஓராண்டில் அதிக அளவில் கொள்கை முடிவுகள் எடுத்து இருக்கிறோம். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட காங்கிரஸ் கொள்கைகளையும் பின்பற்றி வருகிறோம்.
முந்தைய ஆட்சியாளர்கள் சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தினார்கள். தற்போதைய ஆட்சியில் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகின்றன.
பிரதமர் மோடி கடந்த ஓராண்டில் 18 வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம் இந்தியாவின் மதிப்பு வெளிநாடுகளில் உயர்ந்து இருக்கிறது. நமக்கு நல்ல மரியாதையும் கிடைத்து இருக்கிறது.
இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு முக்கியமான இடத்தை முன்கூட்டியே பெற்றுவி்ட்டது
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.