தமிழக ஆளுநரின் செயல்பாடுகளில் சந்தேகம்... ஜனாதிபதியை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள் பேட்டி
தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சி கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தன.
டெல்லி: தமிழகத்தில் ஆளுநரின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதாகவும், ஆச்சரியம் அளிப்பதாகவும் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் எதிர்க்கட்சியை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு பேட்டி அளித்தனர்.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினரின் இணைப்புக்கு பின்னர், தினகரன் தரப்பைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் சட்டப்படி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநரை சந்தித்தனர். சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
எனினும் அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் சட்டபடி தலையிட முடியாது என்றும் ஒரு கட்சியில் இரண்டு பிரிவுகளாக உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சொல்ல இயலாது என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
7 பேர் சந்திப்பு
இதைத் தொடர்ந்து திமுகவின் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்எஸ் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸின் ஆனந்த் சர்மா ஆகியோர் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.
கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பு
அந்த சந்திப்புக்கு பின்னர் 7 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டி.ராஜா பேசுகையில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முதல்வரை அழைத்து பெரும்பான்மை குறித்து கேட்கவில்லை.
கால அவகாசம் கோரினார்-டி.ராஜா
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலையிட வலியுறுத்தினோம். மாநில ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவது நல்லதல்ல என்றார் ஜனாதிபதி. ஜனாதிபதியிடம் இருந்து நல்ல முடிவு வரும். முடிவெடுப்பதில் கால அவகாசம் தேவை என்று ஜனாதிபதி தெரவித்ததாக, டி.ராஜா கூறினார்.
நல்லது நடக்கும்- கனிமொழி
இதைத் தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ் என்பது உட்கட்சி விவகாரம் அல்ல. தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் ஆச்சரியமளிக்கிறது. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட முடிவு குறித்து ஸ்டாலின் அறிவிப்பார். நாங்கள் முன்வைத்த வாதங்களை ஜனாதிபதி ஏற்றிருக்கிறார். எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்றார் கனிமொழி.