கேரள மக்களின் உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்: உம்மன் சாண்டி
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்கவே கேரள அரசு விரும்புகிறது என்று கேரளா முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் தர தயார் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்கவே கேரள அரசு விரும்புகிறது கேரள மக்களின் உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பதில் எந்த மாற்று கருத்தும் கேரள அரசுக்கு இல்லை.
பழமையான முல்லை பெரியாறு அணையின் பலமும், கேரள மக்களின் பாதுகாப்பும் அவசியம். என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கூறினார். மேலும் கனிமவள முறைகேட்டு சம்பவத்தில் மத்திய அரசுக்கு கேரள அரசு அறிக்கை கொடுக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கேரள சமாஜத்திற்கு சென்ற அவர் அங்கு புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டித்தை திறந்து வைத்தார். 10 ஜோடி ஏழை திருமணத்தையும் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கேரளா மறுப்பு தெரிவிக்கவில்லை. தண்ணீரை முழுமையாக தர நாங்கள் உறுதி அளிக்கிறோம். ஆனால் கேரள மக்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியமாகும்.
117 ஆண்டு பழமை வாய்ந்த முல்லை பெரியாறு அணையின் உறுதி தன்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். பழைய காலத்து அணை என்பதால் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுகிறது. அணையின் பாதுகாப்பு குறித்த கவலை எங்களுக்கு உண்டு.
இந்த விஷயத்தில் தமிழக அரசும், தமிழக மக்களும், கேரள மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடிதம் எழுதி உள்ளேன். அந்த கடிதத்தில் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை தெரிவித்து இருக்கிறேன். இதனால் முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து குறைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 6 மாவட்டங்களுக்கு தண்ணீர் தேவையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். தமிழகத்தோடு இணக்கமான சூழலையே கேரளா விரும்புகிறது. முல்லை பெரியாறு அணையில் போடப்பட்ட பாதுகாப்பை மீறி பீர்மேடு எம்.எல்.ஏ, பிஜூமோள் பார்வையிட சென்றது தவறுதான்.
கனிம வள கொள்ளை தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை கேரள அரசிடம் கேட்டுள்ளது. இது தொடர்பாக 20 ஆறுகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மீதி உள்ள ஆறுகளில் ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவோம். அதன்பிறகு ஆறுகளில் மணல் அள்ள அனுமதி வழங்கப்படும்.
கேரள அரசின் எந்த ஒரு தீர்மானத்தை பார்த்தாலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மலையாளி குடும்பத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்தான் சிந்தித்து முடிவெடுத்து இருப்போம் என்று உம்மன் சாண்டி கூறினார்.